Published : 24 Aug 2021 03:13 AM
Last Updated : 24 Aug 2021 03:13 AM

பாலிடெக்னிக் முன்னாள் மாணவர்களுக்கு அரியர் தேர்வு எழுத மீண்டும் வாய்ப்பு

சென்னை

பாலிடெக்னிக் கல்லூரிகளில் படித்து நீண்டகாலமாக அரியர் வைத்திருக்கும், முன்னாள் மாணவர்களுக்கு மீண்டும் சிறப்புத் தேர்வு எழுத உயர்கல்வித் துறை அனுமதி வழங்கியுள்ளது.

இதுதொடர்பாக உயர்கல்வித் துறை வெளியிட்ட அரசாணை:

பட்டயக் கல்வியை முடித்து நிலுவைப் பாடங்களில் தேர்ச்சி பெறாமல்உள்ள முன்னாள் மாணவர்களுக்கு 2019-ம் ஆண்டு அக்டோபர் மற்றும் 2020-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் தேர்வு எழுத வாய்ப்பு அளிக்கப்பட்டது. இதில் பங்கேற்க முடியாத மாணவர்களுக்கு 2020-ம் ஆண்டு டிசம்பர் மாதம் மீண்டும் தேர்வு எழுத வாய்ப்பு வழங்கப்பட்டது.

கரோனா காரணமாகத் தேர்வு எழுதவும், தேர்ச்சி பெறாத மற்றும் தேர்வு கட்டணம் செலுத்த முடியாமலும் தவறவிட்ட மாணவர்களுக்கு வரும் 4 பருவத் தேர்வுகளில் சிறப்பு அனுமதி வழங்கவேண்டும் என்றும்இதற்கான தேர்வு கட்டணம் மற்றும் பதிவுக் கட்டணம் நிர்ணயிப்பது தொடர்பாக ஆணை வழங்கவேண்டும் என்றும் தொழில்நுட்பக்கல்வி இயக்கக தேர்வு வாரியத் தலைவர் அரசைக் கேட்டுக் கொண்டுள்ளார்.

அதன்படி 2021-ம் ஆண்டு மற்றும் 2022-ம் ஆண்டுகளில் நடைபெறும் பருவத் தேர்வுகளின்போது மட்டும் சிறப்புத் தேர்வு எழுத வாய்ப்பு வழங்கப்படுகிறது. அதேபோல, தேர்வு எழுத விரும்பும் பாடங்களுக்கு தலா ரூ.65 தேர்வு கட்டணமாகவும், ஒவ்வொரு வாய்ப்புக்கும் பதிவுக் கட்டணமாக ரூ.750-ம் வசூலிக்கத் தொழில்நுட்ப கல்வி இயக்ககத்துக்கு அனுமதி வழங்கப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x