தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி மாணவர்களுக்கு ஆராய்ச்சிக் கல்வி: மொடக்குறிச்சி அரசுப்பள்ளி ஆசிரியைக்கு தேசிய விருது

தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி மாணவர்களுக்கு ஆராய்ச்சிக் கல்வி: மொடக்குறிச்சி அரசுப்பள்ளி ஆசிரியைக்கு தேசிய விருது
Updated on
1 min read

ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை டி.லலிதா (44) தேசிய நல்லாசியர் விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

தேசிய நல்லாசிரியர் விருதுக்குத் தமிழகத்தில் இருந்து இரண்டு ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதில் ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை டி.லலிதாவும் ஒருவர்.

ஈரோடு மூலப்பாளையத்தைச் சேர்ந்த தலைமையாசிரியை லலிதா முதுகலை இயற்பியல் ஆசிரியராகப் பணியைத் தொடங்கினார். ஆசிரியப் பணியில் 19 ஆண்டுகள் பணி அனுபவம் உள்ளவர் ஆசிரியை லலிதா. கடந்த 2019-ம் ஆண்டு வரை சிவகிரி அரசு மேல்நிலைப் பள்ளியில் முதுகலை இயற்பியல் ஆசிரியராகப் பணிபுரிந்தார். இதன்பின் 2019-ம் ஆண்டு பதவி உயர்வில் சத்தியமங்கலம் அருகே தொட்டம்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியராக நியமிக்கப்பட்டார். கடந்த 6 மாதங்களுக்கு முன்பு மொடக்குறிச்சி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியாராகப் பொறுப்பேற்றார்.

தனக்கு விருது அறிவிக்கப்பட்டது குறித்து தலைமை ஆசிரியர் டி.லலிதா கூறும்போது, ''மாணவர்களுக்கு ஆராய்ச்சி சார்ந்த கல்வியை, தொழில்நுட்பங்களைப் பயன்படுத்திக் கற்றுக்கொடுக்கும் செயல்முறைகளை, நான் பணியாற்றும் பள்ளிகளில் செயல்படுத்தி வருகிறேன். தொழில்நுட்பம் மூலம் மாணவர்களுக்கு எளிதாகக் கற்றுக்கொடுக்க முடியும். தலைமைப் பண்பு குறித்து சர்வதேச அளவிலான ஆய்வுக் கட்டுரையை வெளியிட்டுள்ளேன்.

இயற்கைப் பாதுகாப்பு குறித்து பள்ளி மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறேன். மாணவர்களுக்குப் பாடங்கள் தொடர்பாக 160 வீடியோக்களை யூடியூப் சேனலில் பதிவு செய்து வைத்துள்ளேன். இயற்கை சூழலில் வீடு ஒன்றைக் கட்டுவதற்கான மாதிரியை தயார் செய்து வைத்துள்ளேன்'' என்று தெரிவித்தார்.

தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்ட தலைமையாசிரியைக்கு மாவட்ட கல்வித்துறை அதிகாரிகள் மற்றும் சக ஆசிரியர்கள் என பல்வேறு தரப்பினரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in