Published : 13 Aug 2021 03:16 AM
Last Updated : 13 Aug 2021 03:16 AM
சென்னை ஐஐடி நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
இந்திய சூழலுக்கு ஏற்ப, கரோனா பெருந்தொற்று மற்றும் காசநோய் பரவலை தடுக்கும் வகையிலான புதிய தொழில்நுட்பத்தை கண்டறியும் நோக்கில் சென்னை ஐஐடி, வேலூர் விஐடி, இங்கிலாந்தின் லண்டன் குயின் மேரி பல்கலைக்கழகம் ஆகியவை ஒன்றிணைந்து கூட்டு ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளன. இந்த ஆய்வுப் பணியில் டெல்லியை சேர்ந்த மேக்னட்டோ கிளீன்டெக் நிறுவனமும் இணைந்து செயல்பட்டு வருகிறது.
குறைந்த செலவில் உயர் தொழில்நுட்பத்தை உருவாக்குவதே இந்த கூட்டு ஆராய்ச்சியின் முக்கிய நோக்கம் ஆகும். உள்ளரங்குகள், அலுவலகங்கள், மருத்துவமனைகளில் காற்றில் பரவக்கூடிய தொற்றுகளை தடுப்பதற்கு இந்த ஆராய்ச்சியில் கூடுதல் முக்கியத்துவம் அளிக்கப்படும்.
இந்த ஆராய்ச்சி திட்டம் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டால், இந்திய துணை கண்டத்தில் சுமார் 10 கோடி பேர் பயன்பெறுவார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த ஆராய்ச்சி திட்டத்தின் ஒருங்கிணைப்பாளரான ஐஐடி கடல்சார் பொறியியல் துறை பேராசிரியர் அப்துஸ் சமத் கூறியதாவது:
சமூக பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் நோக்கிலான கூட்டு ஆராய்ச்சி பணிகளுக்கு ஐஐடி எப்போதும் முன்னுரிமை அளித்து வருகிறது. கடந்த 2020-ம் ஆண்டு மார்ச் மாதம் உருவான கரோனா பெருந்தொற்றால் நாம் அனைவருமே நிலைகுலைந்துவிட்டோம். ஓர் ஆராய்ச்சி நிறுவனம் என்ற வகையில், இந்த நோயினால் ஏற்பட்ட வலிகளையும், அதன் காரணமாக ஏற்பட்ட பாதிப்புகளையும் குறைக்கும் விதமாக, ஆய்வுப் பணியில் ஈடுபட முடிவு செய்தோம்.
அந்த நேரத்தில், சர்வதேச கூட்டு ஆராய்ச்சி பணிகளுக்கான ஆராய்ச்சி நிதியை இங்கிலாந்தின் ராயல் அகாடமி ஆஃப் இன்ஜினீயரிங் நிறுவனம் அறிவித்தது. இதையடுத்து, கரோனா பரவலை தடுக்கும் தொழில்நுட்பத்தை கண்டறிவதற்கான கூட்டு ஆராய்ச்சியை உடனடியாக தொடங்கிவிட்டோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT