Published : 12 Aug 2021 03:20 AM
Last Updated : 12 Aug 2021 03:20 AM

செப்டம்பர் 1-ம் தேதி முதல் பள்ளிகளை திறக்க முடிவு: 50% மாணவர்கள் சுழற்சியில் வருவார்கள்: அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தகவல்

சென்னை

தமிழகத்தில் பள்ளிகளை செப்.1-ம் தேதி முதல் திறக்க முடிவு செய்துள்ளதாகவும், இதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் விரைவில் வெளியிடப்படும் எனவும் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தார்.

பள்ளிக்கல்வித் துறையின் மானியக் கோரிக்கை ஆக.27-ம் தேதி நடைபெறவுள்ளது. இதுதொடர்பாக ஆலோசனைக் கூட்டம் சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நேற்று நடைபெற்றது. இதில் பள்ளிக்கல்வி அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி மற்றும் துறை அதிகாரிகள் பங்கேற்றனர். கூட்டத்தில் மானியக் கோரிக்கை சிறப்பம்சங்கள் மற்றும் பள்ளிகள் திறப்பு குறித்து விவாதிக்கப்பட்டது.

அதன் பின்னர் அமைச்சர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: முதல்வரின் அறிவுறுத்தலின்படி செப். 1-ம் தேதி பள்ளிகளைத்திறக்க தயாராக உள்ளோம். நாடுமுழுவதும் 14 மாநிலங்களில் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. அதை அடிப்படையாக வைத்து தமிழகத்திலும் பள்ளிகள் திறக்கப்பட உள்ளன.

பள்ளிகளைத் திறந்தபின்பு பின்பற்றப்பட வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை தயார் செய்து வருகிறோம். கடந்த ஆண்டு பள்ளிகள் திறப்பின்போது வழங்கப்பட்ட வழிமுறைகளுடன் கூடுதலாக சில அம்சங்கள் சேர்க்கப்பட உள்ளன. விரைவில் புதிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்படும்.

முதல்வரின் அறிவுரைப்படி 50 சதவீத மாணவர்களை கொண்டு சுழற்சி முறையில் வகுப்புகள் நடைபெறும். 40 மாணவர்கள் இருந்தால் ஒருநாளில் 20 பேர் மட்டும் வரவழைக்கப்படுவர். பள்ளிக்கு வராத நாளில் மாணவர்களுக்கு கல்வித் தொலைக்காட்சி மற்றும் இணையவழியில் பயிற்சி வழங்கப்படும்.

நடப்பு ஆண்டு தனியார் பள்ளிகளில் இருந்து 2 லட்சம் மாணவர்கள் அரசுப் பள்ளிகளில் சேர்ந்துள்ளனர். கரோனா சூழலால்பள்ளி மாணவர்கள் குழந்தை தொழிலாளர்களாக மாறியுள்ளனரா என்பது குறித்து குழந்தை தொழிலாளர் ஆணையத்துடன் கலந்து ஆலோசித்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

தற்போது பெரும்பாலான ஆசிரியர்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுவிட்டது. எஞ்சியவர்களுக்கும் முன்னுரிமை அடிப்படையில் விரைவில் தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்கப்படும். இதுதவிர பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படவுள்ள 14 விதமான இலவசப் பொருட்கள் குறித்து முதல்வருடன் ஆலோசனை செய்து அவை இறுதிசெய்யப்படும். நீட்தேர்வுக்கு கடந்த ஆண்டைவிட குறைந்த அளவிலான மாணவர்களே விண்ணப்பித்து உள்ளனர்.

நீட் விழிப்புணர்வு

போதுமான விழிப்புணர்வு இல்லாததே விண்ணப்பங்கள் குறைய காரணமாகும். அதனால் மாணவர்களிடம் உரிய விழிப்புணர்வு ஏற்படுத்த அரசு நடவடிக்கை எடுக்கும். அதே நேரம்நீட் விலக்கு என்பதே திமுகவின்கருத்து. அதற்கான சட்டப்போராட்டத்தை தொடர்ந்து நடத்துவோம்.ஆசிரியர் பயிற்சி கல்லூரிகளை தரம் உயர்த்துவது தொடர்பாகபட்ஜெட் தாக்கலான பிறகு அறிவிக்கப்படும். இவ்வாறு அமைச்சர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x