Published : 06 Aug 2021 04:33 PM
Last Updated : 06 Aug 2021 04:33 PM

பேராசிரியர்கள் ஆக.9 முதல் தவறாமல் கல்லூரிக்கு வரவேண்டும்: உயர் கல்வித்துறை உத்தரவு

கலை, அறிவியல், பொறியியல் மற்றும் பாலிடெக்னிக் கல்லூரி பேராசிரியர்கள் அனைவரும் ஆக.9-ம் தேதி முதல் தவறாமல் பணிக்கு வரவேண்டும் என்று உயர் கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

தமிழகத்தில் கரோனா தொற்று அச்சம் காரணமாகக் கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. மாணவர்களுக்கு இணையவழியில் வகுப்புகள், பருவத் தேர்வுகள் நடத்தப்பட்டன. முன்னதாகக் கடந்த மாதத்தில் கரோனா நோய்ப் பரவல் தணிந்த நிலையில் கல்லூரிகளைத் திறப்பது தொடர்பாக உயர் கல்வித்துறை ஆலோசனை செய்தது. கல்லூரிகளை திறப்பது தொடர்பாக முதல்வருடன் ஆலோசித்து இறுதி முடிவு எடுக்கப்படும் என்று உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடியும் தெரிவித்திருந்தார்.

இதற்கிடையே மீண்டும் மெதுவாக கரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இந்தச் சூழலில், கலை, அறிவியல் கல்லூரிகளில் முதலாமாண்டு தவிர மற்ற மாணவர்களுக்கு ஆகஸ்ட் 9-ம் தேதி முதல் ஆன்லைன் வகுப்புகள் தொடங்குகின்றன. பொறியியல் படிப்புகளுக்கு ஆகஸ்ட் 18-ம் தேதி வகுப்புகள் ஆரம்பிக்கப்பட்டு நவ.30-ம் தேதி வரை நடைபெற உள்ளன.

டிச.2-ம் தேதி செய்முறைத் தேர்வும், டிச.13-ம் தேதி பருவத் தேர்வும் நடைபெற உள்ளது. அதேபோல எம்சிஏ, எம்எஸ்சி, எம்பிஏ ஆகிய படிப்புகளுக்கும் ஆக.18-ம் தேதி ஆன்லைன் வகுப்புகள் தொடங்க உள்ளன.

இந்நிலையில் கல்லூரி வகுப்புகள் ஆன்லைனில் தொடங்கப்படுவதை ஒட்டி, அனைத்துப் பேராசிரியர்களும் கல்லூரிகளுக்குத் தவறாமல் பணிக்கு வர வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து உயர் கல்வித்துறைச் செயலர் கார்த்திகேயன், தொழில்நுட்பக் கல்வி இயக்குநர், கல்லூரிக் கல்வி இயக்குநர் மற்றும் அனைத்து பல்கலைக்கழகங்களின் பதிவாளர்களுக்கும் சுற்றறிக்கையை அனுப்பி உள்ளார்.

அதில், ''2021 - 22ஆம் கல்வியாண்டில் கலை, அறிவியல், பொறியியல் கல்லூரிகளில் முதலாமாண்டு தவிர மற்ற மாணவர்களுக்கு ஆகஸ்ட் 9-ம் தேதி முதல் ஆன்லைன் வகுப்புகள் தொடங்குகின்றன.

அனைத்து அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் கலை, அறிவியல் கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகள், பாலிடெக்னிக் கல்லூரிகளும் கரோனா விதிகளையும் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளையும் கட்டாயம் கடைப்பிடிப்பதை நீங்கள் உறுதிசெய்ய வேண்டும். மேற்குறிப்பிட்ட கல்லூரிகளின் பேராசிரியர்கள் அனைத்து வேலை நாட்களிலும் தவறாமல் கல்லூரிக்கு வர வேண்டும்'' என்று தெரிவிக்கப்பட்டுளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x