Published : 04 Aug 2021 08:00 PM
Last Updated : 04 Aug 2021 08:00 PM

மாணவர்களுக்கு உணவளிக்க செப்.1 முதல் அங்கன்வாடிகளைத் திறக்க தமிழக அரசு முடிவு

சத்துணவு மாணவர்களுக்கு உணவு வழங்குவதற்காக செப்டம்பர் 1-ம் தேதி முதல் அங்கன்வாடி மையங்களை மீண்டும் திறக்க முடிவு செய்துள்ளதாகத் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

கரோனா ஊரடங்கு காரணமாகப் பள்ளிகள் மூடப்பட்டுள்ளதால் சத்துணவு மாணவர்களுக்குச் சமைக்கப்பட்ட உணவை வழங்க உத்தரவிடக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் சிட்டிசன் கன்ஸ்யூமர் அண்ட் சிவிக் ஆக்‌ஷன் குரூப் என்ற அமைப்பின் சார்பில் பொதுநல வழக்குத் தொடரப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், அங்கன்வாடி மையங்களை மீண்டும் திறப்பது குறித்து ஆலோசிக்க அறிவுறுத்தியிருந்தது. இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி மற்றும் நீதிபதி பி.டி.ஆதி கேசவலு அடங்கிய அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரர் தரப்பு வழக்கறிஞர், அரசு தலைமை வழக்கறிஞர், தலைமைச் செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகளுடன் நடத்திய கூட்டத்தில், இரண்டு வயது முதல் 6 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு சத்துணவு மையங்களில் சமைக்கப்பட்ட மதிய உணவை, அவர்களின் வீடுகளுக்கு நேரடியாகச் சென்று வழங்குவது என முடிவெடுத்துள்ளதாகவும், இது 15 நாட்களுக்குள் செயல்படுத்தப்பட உள்ளதாக அரசு கடிதம் அனுப்பியுள்ளதாகவும் தெரிவித்தார்.

மற்ற மாணவர்களைப் பொறுத்தவரை, செப்டம்பர் 1-ம் தேதி முதல் அந்தந்தப் பகுதியில் இருக்கக்கூடிய அங்கன்வாடி மையங்களின் மூலம் உணவு வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். தமிழக அரசும், இது தொடர்பான கடிதத்தைத் தாக்கல் செய்தது.

இதையடுத்து சத்துணவு திட்டத்தின் மூலம் மீண்டும் உணவு வழங்குவதை விரைவாகச் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கத் தமிழக அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், மீண்டும் எப்படி அங்கன்வாடி மையங்கள் திறக்கப்படும் என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு, விசாரணையை செப்டம்பர் 3-ம் தேதிக்குத் தள்ளிவைத்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x