Published : 04 Aug 2021 01:27 PM
Last Updated : 04 Aug 2021 01:27 PM

தனியார் பள்ளிகளில் 25% இட ஒதுக்கீடு: சேர்க்கைக்கு விண்ணப்பிக்கக் கால அவகாசம் நீட்டிப்பு‌ 

கரோனா பொது முடக்கத்தைக் கருத்தில் கொண்டு தனியார் பள்ளிகளில் 25 சதவீத இட ஒதுக்கீட்டின்‌ கீழ்‌ வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும்‌ நலிவடைந்த பிரிவினரின்‌ குழந்தைகள் சேர்க்கைக்குக் கால அவகாசம்‌ ஆக.13-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம், 2009 பிரிவு 12(1) (சி)-ன்படி, சிறுபான்மை அல்லாத அனைத்துத் தனியார் பள்ளிகளிலும் வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும் நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகளுக்கு எல்கேஜி அல்லது 1-ம் வகுப்பில், குறைந்தபட்சம் 25 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு மாணவர் சேர்க்கை நடத்தப்பட வேண்டும்.

கரோனா பரவலைக் கருத்தில் கொண்டு தனியார் பள்ளிகள் இணையவழியில் விண்ணப்பங்களைப் பெற்று, கரோனா பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்றி மாணவர் சேர்க்கையை நடத்த வேண்டும் என்றும், தங்களின் குழந்தைகளைத் தனியார் பள்ளிகளில் சேர்க்க விரும்பும் பெற்றோர் ஜூலை 5ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 3ஆம் தேதி வரை இணையவழியில் விண்ணப்பிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த அவகாசம் நேற்றுடன் (ஆக.3) முடிவடைந்த நிலையில், கரோனா பொது முடக்கத்தைக் கருத்தில்கொண்டு கால அவகாசம்‌ நீட்டிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இதுகுறித்துப் பள்ளிக் குழந்தைகளுக்கான இலவச மற்றும்‌ கட்டாயக்‌ கல்வி உரிமைச்‌ சட்ட மாநில முதன்மைத்‌ தொடர்பு அலுவலர்‌ மற்றும்‌ மெட்ரிகுலேஷன்‌ பள்ளிகள்‌ இயக்குநர்‌ அ. கருப்பசாமி கூறும்போது, ''குழந்தைகளுக்கான இலவச மற்றும்‌ கட்டாயக்‌ கல்வி உரிமைச்‌ சட்டம்‌, 2009, சட்டப்‌ பிரிவு 12 (1) (சி)ன்‌ கீழ்‌ சிறுபான்மையற்ற தனியார்‌ சுயநிதிப்‌ பள்ளிகளில்‌ நுழைவு நிலை வகுப்பில்‌ 25% ஒதுக்கீட்டில்‌ வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும்‌ நலிவடைந்த பிரிவினரின்‌ குழந்தைகளுக்கான சேர்க்கை இணைய வழியாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

பெற்றோர் https://rte.tnschools.gov.in என்ற இணையதளம்‌ வழியாக விண்ணப்பிக்க 05.07.2021 முதல்‌ 03.08.2021 வரை வாய்ப்பு வழங்கப்பட்டது. நேற்று வரை 73,086 விண்ணப்பங்கள்‌ இணைய வழியில்‌ பெறப்பட்டுள்ளன. தற்போது கரோனா வைரஸ் பொது முடக்கத்தைக் கருத்தில்‌ கொண்டு இணையவழியில்‌ விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம்‌ 13.08.2021 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது'' என்று தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x