Published : 04 Aug 2021 03:19 AM
Last Updated : 04 Aug 2021 03:19 AM
எஸ்எஸ்எல்சி, பிளஸ் 2 முடித்து விட்டு தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் பெற்ற இளங்கலை பட்டப்படிப்பு செல்லும் என்று பல்கலைக்கழகத்தின் பதிவாளர் கே.ரத்தினகுமார் விளக் கம் அளித்துள்ளார்.
இதுதொடர்பாக தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தின் பதிவாளர் ரத்தினகுமார் நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
உயர் நீதிமன்றம் உத்தரவு
ஒரு பல்கலைக்கழகத்தில் இளங்கலை பட்டப் படிப்பை பெறாமல் திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் நேரடியாக முதுகலை பட்டத்தை பெற்றால், அதை வைத்துபதவி உயர்வுக்கு உரிமை கோர முடியாது என்று சென்னை உயர் நீதிமன்றம் ஒரு வழக்கில் சில நாட்களுக்கு முன்பு தீர்ப்பு வழங்கியது.
ஆனால், ‘திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் பெற்ற பட்டப்படிப்பானது, பணி நியமனம் மற்றும் பதவி உயர்வுக்கு செல்லாது’ என்பதுபோல, ஊடகங்களில் பொதுவாக செய்திகள் வெளியாகின.
தமிழக அரசின் அரசாணை எண் 107-ன்படி, தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் முறையான முறையில் அதாவது, எஸ்எஸ்எல்சி, பிளஸ் 2-வுக்கு பிறகு பட்டப்படிப்பை முடித்த மாணவர்களின் பட்டம், மற்ற பல்கலைக்கழகங்களின் பட்டபடிப்பை போலவே செல்லுபடியாகும்.
இந்த பட்டம் டிஎன்பிஎஸ்சிமூலம் பணி நியமனம் செய்யவும் செல்லத்தக்கது.
அதேபோன்று தமிழக அரசின் அரசாணை எண் 242-ன்படி, திறந்தநிலை பல்கலைக்கழகத்தில், எஸ்எஸ்எல்சி அதன் பிறகு 3 ஆண்டு கால டிப்ளமா படிப்பு அல்லது 2 ஆண்டு கால ஐடிஐ அல்லது இடைநிலை ஆசிரியர் பயிற்சி படிப்பு முடித்து பட்டம் பெற்ற மாணவர்களின் பட்டமும் இதர பல்கலைக்கழகங்களின் பட்டப் படிப்பை போலவே செல்லுபடியாகும். இவ்வாறு அவர்தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT