Published : 03 Aug 2021 06:09 PM
Last Updated : 03 Aug 2021 06:09 PM

கரடிகுளம் நடுநிலைப் பள்ளியைத் தரம் உயர்த்துக: கிராம மக்கள் கனிமொழி எம்.பி.யிடம் மனு

கோவில்பட்டி

கரடிகுளம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியை உயர்நிலைப் பள்ளியாகத் தரம் உயர்த்த வேண்டும் என கிராம மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

கழுகுமலை அருகே கரடிகுளம் கிராமத்தில் சுமார் 3 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் 1950-ம் ஆண்டு தொடங்கப்பட்ட கயத்தாறு ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளி 2003-ம் ஆண்டு நடுநிலைப் பள்ளியாகத் தரம் உயர்த்தப்பட்டது. தற்போது எல்.கே.ஜி. முதல் 8-ம் வகுப்பு வரை 199 மாணவர்கள் (ஆங்கில வழியில்) படித்து வருகின்றனர்.

8-ம் வகுப்புக்குப் பின்னர் இங்குள்ள மாணவர்கள் தொலைதூரத்தில் உள்ள தனியார் பள்ளிகளுக்குச் செல்ல வேண்டிய நிலை உள்ளது. எனவே, கரடிகுளத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியை உயர்நிலைப் பள்ளியாகத் தரம் உயர்த்த வேண்டும் என கிராம மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

இதுகுறித்து கனிமொழி எம்.பி.யிடம் கிராம மக்கள் வழங்கிய மனுவில், ''கரடிகுளம் கிராமத்தில் உள்ள கயத்தாறு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பயிலும் 80 சதவீத மாணவர்கள் பட்டியல் பிரிவு மற்றும் வறுமைக்கோட்டுக்குக் கீழ் உள்ள ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள். எங்கள் கிராமக் குழந்தைகள் 8-ம் வகுப்புக்குப் பின்னர், போதிய போக்குவரத்து வசதி இல்லாத, தொலைவில் உள்ள தனியார் பள்ளிகளில் அதிகச் செலவு செய்து, ஆங்கில வழியைத் தொடர வேண்டிய நிலை உள்ளது. இதனால் பெரும்பாலும் நடுநிலைக் கல்விக்குப் பின்னர் உயர் கல்வி பெற முடியாமல் கல்வி இடைநிற்றல் ஏற்படும் அவல நிலை உருவாகி விடும்.

இந்த ஆண்டு பள்ளியின் தரம் உயர்த்தப்படும் என்ற நம்பிக்கையில் மாணவர்கள் காத்திருக்கின்றனர். எனவே, பெண்கள் வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்தில் தனிக் கவனம் செலுத்தும் தமிழக அரசு, பெண் கல்வியை ஊக்கப்படுத்தும் வகையில் கரடிகுளம் நடுநிலைப் பள்ளியை உயர்நிலைப் பள்ளியாகத் தரம் உயர்த்த வேண்டும். இதனால் அனைவருக்கும் உயர்நிலைக் கல்வி சீராகச் சென்றடையும். 50 ஆண்டுகளாக எங்கள் கிராமத்துப் பள்ளிக் குழந்தைகள் உயர் கல்வி பயிலச் சந்தித்த இடர்ப்பாடுகளைக் கருத்தில் கொண்டு, பள்ளியைத் தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என கிராம மக்கள் மனுவில் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்துக் கரடிகுளம் கிராம மக்கள் கூறுகையில், “ஆங்கிலக் கல்வி என்பது எட்டாக் கனியாக இருந்தபோது, எங்கள் ஊர் பள்ளியில் தொடங்கப்பட்ட ஆங்கிலவழிக் கல்வியில் குழந்தைகளைச் சேர்த்தோம். கடந்த கல்வியாண்டு முதல் அனைத்துக் குழந்தைகளும் ஆங்கிலவழிக் கல்வியைத்தான் பயின்று வருகின்றனர். 8-ம் வகுப்புக்குப் பின்னர் ஆங்கில வழிக் கல்விக்குத் தொலைதூரம் செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதனால் எங்கள் ஊரில் உள்ள பள்ளியைத் தரம் உயர்த்தினால் நன்றாக இருக்கும்” என்று தெரிவித்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x