Published : 03 Aug 2021 03:17 PM
Last Updated : 03 Aug 2021 03:17 PM

தமிழகத்தைச் சேர்ந்தவரையே துணைவேந்தராக நியமியுங்கள்: அண்ணா பல்கலை. ஆசிரியர் கூட்டமைப்பு வேண்டுகோள் 

சென்னை

அண்ணா பல்கலைக்கழகத்துக்கு தமிழகத்தைச் சேர்ந்தவரையே துணைவேந்தராக நியமிக்க வேண்டும் என ஆளுநருக்கு அண்ணா பல்கலைக்கழக ஆசிரியர் கூட்டமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது.

அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக இருந்த எம்.கே.சுரப்பாவின் பதவிக்காலம் கடந்த ஏப். 11-ம் தேதியுடன் நிறைவு பெற்றது. இதையடுத்து புதிய துணைவேந்தரைத் தேர்வு செய்ய டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலை. துணைவேந்தர் ஜெகதீஷ் குமார், சென்னை பல்கலை. முன்னாள் துணைவேந்தர் எஸ்.பி.தியாகராஜன், ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி ஷீலா ராணி சுங்கத் ஆகியோரைக் கொண்ட தேடல் குழு அமைக்கப்பட்டது.

இதற்கிடையே அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பதவிக்கு நாடு முழுவதும் இருந்து 160 பேர் விண்ணப்பித்திருந்த நிலையில், அதில் 10 பேரை நேர்முகத் தேர்வுக்குத் தகுதியானவர்களாகத் தேடல் குழு இறுதி செய்துள்ளது.

அண்ணா பல்கலைக்கழகத்தின் பேராசிரியர்கள் 5 பேர், சென்னை ஐஐடியின் பேராசிரியர்கள் இருவர் ஆகியோர் உள்ளிட்ட 10 பேருக்கான நேர்காணல் ஆகஸ்ட் 9-ம் தேதி நடத்தப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் அண்ணா பல்கலைக்கழகத்துக்குத் தமிழகத்தைச் சேர்ந்தவரையே துணைவேந்தராக நியமிக்க வேண்டும் என ஆளுநருக்கு அண்ணா பல்கலைக்கழக ஆசிரியர் கூட்டமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது.

இதுகுறித்து அந்த அமைப்பின் தலைவர் அருள் அறம், பொதுச்செயலாளர் சந்திரமோகன் ஆகியோர் ஆளுநா் பன்வாரிலால் புரோஹித்துக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், ''தமிழகத்தின் தலைசிறந்த அடையாளமாகத் திகழும் அண்ணா பல்கலைக்கழகத்துக்கு திறமையான, நேர்மையான ஒருவரைத் துணைவேந்தராகத் தேர்வு செய்ய வேண்டும். அவர் தமிழகத்தைச் சேந்தவராக இருக்க வேண்டும்.

ஒருவேளை அண்ணா பல்கலைக்கழகத்தின் முன்னாள் / இன்னாள் பேராசிரியர்களைத் துணைவேந்தராகத் தேர்வு செய்தால், சம்பந்தப்பட்டவர் தொடர்பாகப் பல்கலைக்கழக ஊழியர்களிடம் ஆளுநர் கலந்து ஆலோசிக்க வேண்டும். எனவே, துணைவேந்தா் நியமனத்தில் சிறப்பு வாய்ந்த, தகுதியான ஒருவரைத் துணைவேந்தராக நியமிப்பீர்கள் என நம்புகிறோம்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x