Published : 03 Aug 2021 06:05 AM
Last Updated : 03 Aug 2021 06:05 AM

‘இந்து தமிழ் திசை’, அம்ரிதா விஷ்வ வித்யாபீடம் இணைந்து வழங்கும் ‘உயர்வுக்கு உயர்கல்வி’- ஏரோஸ்பேஸ்- ஏரோநாட்டிகல் துறையில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் வேலைவாய்ப்புகள்: ஆன்லைன் வழிகாட்டி நிகழ்ச்சியில் துறை வல்லுநர்கள் தகவல்

சென்னை

ஏரோஸ்பேஸ் & ஏரோநாட்டிகல் துறைகளில் நாளுக்கு நாள் வேலை வாய்ப்புகள் அதிகரித்துவருவதாக ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ், அம்ரிதா விஷ்வ வித்யாபீடம் இணைந்து நடத்தும் ‘உயர்வுக்கு உயர்கல்வி’ ஆன்லைன் வழிகாட்டி நிகழ்ச்சியில் வல்லுநர்கள் கூறினர்.

பிளஸ் 2 முடித்துள்ள மாணவர்கள் பயன்பெறும் வகையில் ‘இந்து தமிழ் திசை’ நாளிதழும், அம்ரிதா விஷ்வ வித்யாபீடமும் இணைந்து ‘உயர்வுக்கு உயர்கல்வி’ என்ற தொடர் நிகழ்ச்சியை ஆன்லைனில் நடத்துகின்றன. கடந்த 10-ம் தேதி தொடங்கிய இந்த நிகழ்ச்சி, இன்னும் 7 நாட்கள் நடக்க உள்ளது.

கடந்த 1-ம் தேதி நடந்த 11-வது நிகழ்வில் கம்ப்யூட்டர் ஏரோஸ்பேஸ் & ஏரோநாட்டிகல் படிப்புகள் எனும் தலைப்பில் துறை வல்லுநர்கள் உரையாற்றினர்.

சிங்கப்பூர் பல்கலைக்கழகத்தில் தொழில்நுட்பம் மற்றும் வடிவமைப்பில் முனைவர் பட்டம் பெற்ற எம்.அஜய்குமார்: புதுமைகள் செய்
வதில் ஆர்வம் உள்ளவர்களுக்கான படிப்பாக ஏரோஸ்பேஸ் & ஏரோநாட்டிகல் உள்ளன. அப்துல் கலாம் போல நாமும் வரவேண்டும் என்ற ஆசையில்தான் இப்படிப்பை தேர்வுசெய்து படித்தேன். செயற்கைக் கோள் தொழில்நுட்பத் துறையில் பணியாற்ற ஏரோஸ்பேஸ் இன்ஜினீயரிங் படித்திருக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை.

கெமிக்கல், எலெக்ட்ரிகல் அண்ட் எலெக்ட்ரானிக்ஸ், மெக்கானிக்கல் ஆகிய படிப்புகளை முடித்தாலும் இத்துறையில் பணிபுரிய முடியும். ஏரோஸ்பேஸ் முடித்தவர்களுக்கு அரசு, தனியார் நிறுவனங் களில் ஏராளமான வேலைவாய்ப்புகள் காத்திருக்கின்றன. ஆயில் கார்ப்பரேஷன், சாப்ட்வேர், ஹெல்த், கார் கம்பெனிகள் என பலநிறுவனங்களில் வாய்ப்புகள் உள்ளன. இதில், மேற்படிப்பை தொடரவிரும்புவோருக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. பல தரப்பட்ட மொழிகள் பேசும் மாணவர்கள் படிக்கும் கல்லூரியில் படிப்பது பல மொழிகளை அறிந்து கொள்ளவும், கூடுதல் அனுபவங்கள் பெறவும் உதவும்.

இஸ்ரோ முன்னாள் துணைத் தலைவர், மூத்த விஞ்ஞானி என்.வளர்மதி: பிளஸ் 2 முடித்துவிட்டு அடுத்து என்ன படிப்பது என்கிற தெளிவைப் பெறுவதற்கான பயனுள்ள வழிகாட்டி நிகழ்ச்சியாக, ‘உயர்வுக்கு உயர்கல்வி’ நிகழ்வு அமைந்துள்ளது. நாங்கள் படித்த காலத்தில் இதுபோன்ற வழிகாட்டுதல்கள் கிடையாது. 1975-ல் கோவையில் கல்லூரிப் படிப்பை முடித்தேன். அப்போது இன்ஜினீயரிங் படிப்பில் மெக்கானிக்கல், சிவில், எலெக்ட்ரிகல் அண்ட் எலெக்ட்ரானிக்ஸ் என நான்கைந்து படிப்புகள்தான் இருந்தன. இப்போது 30-க்கும் மேற்பட்ட படிப்புகள் உள்ளன. ஏரோஸ்பேஸ் படிப்பில் விமான தொழில்நுட்ப இன்ஜின் வடிவமைப்பு, விமானத்தை இயக்கும் எரிபொருள், ஏரோடைனமிக்ஸ் என பல்வேறு சிறப்பு பிரிவுகள் உள்ளன. நம் விருப்பத்துக்கு ஏற்ப,நமக்கான படிப்பை தேர்ந்தெடுத்து படிக்க வேண்டும். இஸ்ரோ, டிஆர்டிஓ, இந்துஸ்தான் ஏரோநாட்டிகல் லிமிடெட் (HAL), சிவில் ஏவியேஷன் துறை, நேஷனல் ஏரோஸ்பேஸ் லேப் (NAL), ஏர் இந்தியா, இந்திய விமானப் படை மட்டுமின்றி தனியார் நிறுவனங்களிலும் இத்துறைக்கு ஏராளமான வேலை வாய்ப்புகள் உள்ளன.

சென்னை இந்துஸ்தான் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி அண்ட்சயின்ஸ் (HITS) ஸ்கூல் ஆஃப் ஏரோநாட்டிகல் சயின்ஸ் துறைத் தலைவர், பேராசிரியர் டாக்டர் ஆர்.அசோகன்: ஏரோநாட்டிகல், ஏரோஸ்பேஸ் துறைகளில் உலக அளவில் கண்டுபிடிக்கப்பட்டிருப்பது 10 சதவீதம் மட்டுமே. இன்னும் கண்டுபிடிக்க வேண்டியது நிறைய உள்ளன.

வித்தியாசமான சிந்தனையும், கடின உழைப்பும் உள்ளவர்களுக்கு இத்துறையில் பிரகாசமான எதிர்காலம் உண்டு. தற்போது ஏரோஸ்பேஸ் தொழில்நுட்பம் அனைத்து துறைகளுக்கும் பயன் தரும் துறையாக உள்ளது.

தொடக்க காலத்தில் ஏரோநாட்டிகல் துறை பெரிய அளவில் வளர்ச்சி இல்லாமல் இருந்தது. 1914-க்கு பிறகு, முதல் உலகப் போர், அதைத் தொடர்ந்து நடந்த இரண்டாம் உலகப் போருக்குப் பின்னரே, இத்துறையின் முக்கியத்துவமும், தேவையும் பல மடங்கு
அதிகரித்தது. கடல்வழி, தரைவழியைக் கடந்து, வான்வழியிலான முன்னேற்றத்தை அனைத்து நாடுகளும் முன்னெடுத்தன. நாளுக்குநாள் அதிகரித்துவரும் வேலைவாய்ப்புகள் கொண்ட, வேகமாக வளர்ச்சியடைந்து வரும் துறையாக ஏரோஸ்பேஸ், ஏரோநாட்டிகல் துறை வளர்ந்துள்ளது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

பின்னர், பொறியியல் படிப்பு, எதிர்கால வேலைவாய்ப்புகள் பற்றிய கேள்விகளுக்கு வல்லுநர்கள் விரிவாக விளக்கம் அளித்த
னர். இந்த ஆன்லைன் வழிகாட்டி நிகழ்ச்சியை ‘இந்து தமிழ் திசை’ நாளிதழின் முதுநிலை துணை ஆசிரியர் ம.சுசித்ரா நெறிப்படுத்தினார்.

முழு நிகழ்வையும் காணலாம்

‘உயர்வுக்கு உயர்கல்வி’ நிகழ்ச்சியை சவீதா இன்ஜினீயரிங் காலேஜ், சென்னை இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி, ஸ்ரீஈஸ்வர் காலேஜ் ஆஃப் இன்ஜினீயரிங், சிவகாசி ஸ்ரீகாளீஸ்வரி காலேஜ், வேல்ஸ் இன்ஸ்டிடியூட் ஆஃப் சயின்ஸ் அண்ட் டெக்னாலஜி ஆகியவை இணைந்து வழங்கின.

இந்த நிகழ்வில் பங்கேற்கத் தவறியவர்கள் https://www.youtube.com/user/tamithehindu/videos என்ற லிங்க் மூலம் முழு நிகழ்வையும் பார்க்கலாம். இந்நிகழ்வில் பங்கேற்க விரும்புவோர் https://bit.ly/3wxsbK6 என்ற லிங்க்கில் பதிவுசெய்து கொள்ளவும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x