திறந்தநிலைப் பல்கலை மூலம் முதுகலைப் பட்டம்: அரசுத் துறைகளில் பதவி உயர்வு இல்லை- உயர் நீதிமன்றம் உத்தரவு

திறந்தநிலைப் பல்கலை மூலம் முதுகலைப் பட்டம்: அரசுத் துறைகளில் பதவி உயர்வு இல்லை- உயர் நீதிமன்றம் உத்தரவு
Updated on
1 min read

திறந்தநிலைப் பல்கலைக்கழகங்கள் மூலம் முதுகலைப் பட்டம் பெற்றவர்கள், அரசுத் துறைகளில் பதவி உயர்வு பெற முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

தமிழக பத்திரப் பதிவுத் துறையில் இரண்டாம் நிலை சார் பதிவாளராகத் தேர்வான வேலூர் மாவட்டம் சோழிங்கரைச் சேர்ந்த செந்தில்குமார், துறைரீதியான தேர்வுகளில் தேர்ச்சி பெற்றுள்ளதால் முதல் நிலை சார் பதிவாளராகப் பதவி உயர்வு வழங்கக்கோரி அரசுக்கு விண்ணப்பித்தார்.

ஆனால், கல்லூரிக்குச் சென்று பட்டப் படிப்பைப் படிக்காமல், திறந்தநிலைக் கல்வி மூலம் பட்ட மேற்படிப்பை முடித்துள்ளதால், பதவி உயர்வுப் பட்டியலில் இடம்பெறத் தகுதியில்லை என வணிகவரித் துறை அவரது கோரிக்கையை நிராகரித்தது.

இதனை எதிர்த்து செந்தில்குமார் தாக்கல் செய்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, அரசு நிர்ணயித்துள்ள தகுதி என்பது பணி நியமனத்திற்கானதுதானே தவிர, பதவி உயர்வுக்கு அல்ல எனக் கூறி, அந்த உத்தரவை ரத்து செய்ததுடன், பதவி உயர்வுப் பட்டியலில் செந்தில்குமார் பெயரைச் சேர்க்கவும் உத்தரவிட்டார்.

இதை எதிர்த்து தமிழ்நாடு அரசின் பத்திரப்பதிவுத் துறைச் தலைவரும், வணிகவரித் துறைச் செயலாளரும் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர்.

அந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் புஷ்பா சத்யநாராயணா மற்றும் கிருஷ்ணன் ராமசாமி அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, தமிழ்நாடு பத்திரப்பதிவுத் துறைத் தலைவர், வணிக வரித்துறைச் செயலாளர் ஆகியோரின் தரப்பில் அரசு வழக்கறிஞர் இரா.நீலகண்டனும், சார் பதிவாளர் செந்தில்குமார் தரப்பில் எம்.ராமமூர்த்தியும் ஆஜராகினர்.

நீதிபதிகள் பிறப்பித்த தீர்ப்பில், திறந்தநிலைப் பல்கலைக்கழகம் அல்லது தொலைதூரத் கல்வி மூலம் பட்டப் படிப்பை முடிக்காமல், பட்ட மேற்படிப்புப் படித்தவர்களை பணி நியமனத்துக்கோ, பதவி உயர்வுக்கோ பரிசீலிக்க முடியாது என உச்ச நீதிமன்றம் பிறப்பித்துள்ள தீர்ப்பைச் சுட்டிக்காட்டி, பதவி உயர்வுப் பட்டியலில் செந்தில்குமாரைச் சேர்க்க வேண்டுமென்ற தனி நீதிபதி உத்தரவை ரத்து செய்து தீர்ப்பளித்தது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in