

12-ம் வகுப்பு மாற்றுத்திறனாளி மாணவர்கள் அனைவருக்கும் தேர்ச்சி வழங்கப்படுவதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். மதிப்பீட்டு முறை குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாகத் தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
''தமிழகத்தில் 2021ஆம் ஆண்டு 12-ம் வகுப்புப் பொதுத்தேர்வு எழுதுவதில் இருந்து அனைத்து மாணவர்களுக்கும் விலக்களித்ததைப் போல ஆகஸ்ட் 2021 மாதத்தில் நடைபெறவுள்ள 12-ம் வகுப்புத் துணைத் தேர்வுகளைத் தனித் தேர்வர்களாக எழுத விண்ணப்பித்துள்ள மாற்றுத் திறனாளி மாணவர்கள் அனைவரும் 2016ஆம் ஆண்டு மாற்றுத் திறனாளிகள் உரிமைகள் சட்டப் பிரிவு 17(i)-ன் அடிப்படையில் தேர்வு எழுதுவதில் இருந்து விலக்களிக்கப்படுகிறது. அவர்கள் அனைவரையும் தேர்ச்சி பெற்றதாக அறிவித்து முதல்வர் ஆணையிட்டுள்ளார்.
இவ்வாறு தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்படும் மாணவர்கள் அனைவருக்கும் மதிப்பெண்கள் வழங்குவது குறித்த நடைமுறையை வடிவமைத்து உரிய ஆணைகள் பள்ளிக் கல்வித்துறையால் வெளியிடப்படும்.
மேலும் மேற்படி தேர்வுகளை எழுத விண்ணப்பித்துள்ள மாற்றுத் திறனாளி மாணவர்கள் தாங்கள் விரும்பும்பட்சத்தில் இத்தேர்வினை எழுதலாம். தங்களது சுய விருப்பத்தின் அடிப்படையில் தேர்வு எழுதும் மாணவர்கள் பின்னாளில் இந்த ஆணையின் அடிப்படையில் தேர்ச்சி பெற்றதாகத் தங்களை அறிவிக்குமாறு கோரக்கூடாது என்றும் ஆணையிடப்பட்டுள்ளது''.
இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.