Published : 31 Jul 2021 03:16 PM
Last Updated : 31 Jul 2021 03:16 PM

மாணவிகளுக்குப் பாலியல் விழிப்புணர்வு; பொறுப்பாளராக ஆசிரியைகளை மட்டுமே நியமிக்க உத்தரவு

மாணவிகளுக்கு குழந்தைத் திருமணம், பாலியல் விழிப்புணர்வு ஏற்படுத்த ஆசிரியைகளை பொறுப்பாளராக நியமிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. ஆசிரியர்களைப் பொறுப்பாளராக நியமிக்கக்கூடாது எனவும் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

பள்ளிகளில் பயிலும் 8 முதல் 12 ஆம் வகுப்பு வரையுள்ள மாணவிகளுக்கு குழந்தை திருமணம் மற்றும் பாலியல் விழிப்புணர்வு குறித்த விவரங்களைத் தெளிவுபடுத்த வேண்டும் என கரூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் வட்டாரக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பி உள்ள சுற்றறிக்கை:

பள்ளிகளில் ஒவ்வொரு 10 மாணவிகளுக்கும், ஒரு ஆசிரியை நியமிக்கப்பட்டு, விழிப்புணர்வைக் கொடுக்க வேண்டும்.

அனைத்துப் பள்ளிகளிலும் 8 முதல் 12ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவிகளுக்குக் குழந்தைத் திருமணம் மற்றும் பாலியல் விவகாரங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஒவ்வொரு 10 மாணவிகளுக்கும் பொறுப்பாளராக ஒரு ஆசிரியை வீதம் நியமனம் செய்து karurc3ceo@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புமாறும் தலைமை ஆசிரியரின் கையொப்பமிட்ட பிரதியை முதன்மைக் கல்வி அலுவலகத்தில் ஒப்படைக்குமாறும் தலைமை ஆசிரியர்கள் மற்றும் முதல்வர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

1. ஒருவர் கூட விடுபடாமல் பள்ளியில் பணிபுரியும் அனைத்து ஆசிரியைகளையும் பொறுப்பாளராக நியமனம் செய்ய வேண்டும்.

2. ஒவ்வொரு 10 மாணவிகளுக்கு ஒரு ஆசிரியை வீதம் பொறுப்பாளராக நியமனம் செய்யும்போது, மாணவிகள் பயிலும் வகுப்பு பொறுப்பு ஆசிரியை கற்பிக்கும் வகுப்பு எனவும் மேல்நிலை வகுப்பு , உயர்நிலை வகுப்பு, நடுநிலை வகுப்பு, தொடக்கநிலை வகுப்பு எனவும் பேதம் பிரித்துப் பார்க்க வேண்டியதில்லை.

3. ஒவ்வொரு 10 மாணவிகளுக்கு ஒரு ஆசிரியை வீதம் பொறுப்பாளராக நியமனம் செய்ய வேண்டி இருப்பினும் மாணவிகளின் எண்ணிக்கை ஆசிரியைகளின் எண்ணிக்கை ஆகியவற்றைக் கணக்கிட்டுச் சமமாகப் பிரித்தல் வேண்டும்.

4.மாணவிகளுக்கு ஆண் ஆசிரியர்களைப் பொறுப்பாளராக நியமனம் செய்யக் கூடாது.

இவ்வாறு அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x