Published : 31 Jul 2021 03:14 AM
Last Updated : 31 Jul 2021 03:14 AM

தமிழக அரசு கல்வி நிறுவனம் நடத்தும் தொழிலாளர் மேலாண்மை படிப்புகளில் சேர ஆகஸ்ட் 10-ம் தேதிவரை விண்ணப்பிக்கலாம்

சென்னை

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையம் சென்னை அம்பத்தூரில் (மின் வாரிய சாலை, மங்கலபுரம், அரசு ஐடிஐ பின்புறம்) இயங்கி வருகிறது.

இங்கு பி.ஏ. (தொழிலாளர் மேலாண்மை), எம்.ஏ. (தொழிலாளர் மேலாண்மை), தொழிலாளர் நிர்வாகத்தில் முதுநிலை டிப்ளமா படிப்பு (மாலை நேரம்), தொழிலாளர் சட்டங்களும், நிர்வாகவியல் சட்டமும் டிப்ளமா படிப்பு (வார இறுதி நாட்கள்) ஆகியவை நடத்தப்பட்டு வருகின்றன.

இந்த படிப்புகள், தொழிலாளர் நல அலுவலர் பதவிக்கு பிரத்யேக கல்வித் தகுதியாக தமிழக அரசால் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. மேலும், தொழிலாளர் உதவி ஆணையர், தொழிலாளர் உதவி ஆய்வாளர் ஆகிய பதவிகளுக்கு முன்னுரிமை தகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.

பிளஸ் 2 முடித்த மாணவர்கள் பட்டப் படிப்புக்கும், பட்டதாரிகள் முதுகலை பட்டப் படிப்பு மற்றும் டிப்ளமா படிப்புகளுக்கும் விண்ணப்பிக்கலாம். மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறும். விண்ணப்பங்களைப் பெற tilschennai@tn.gov.in என்ற மின்னஞ்சல் மூலம் பெயர், தொலைபேசி எண், முகவரி, மின்னஞ்சல் முகவரி ஆகிய விவரங்களை அனுப்ப வேண்டும். இதற்கான விண்ணப்பக் கட்டணம் ரூ.200. எஸ்சி, எஸ்டி வகுப்பினருக்கு ரூ.100 மட்டும். அவர்கள் சாதிச் சான்றிதழ் நகலை தாக்கல் செய்ய வேண்டும்.

பட்டப் படிப்புக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் ஆகஸ்ட் 10. பட்ட மேற்படிப்பு மற்றும் டிப்ளமா படிப்புகளுக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் ஆகஸ்ட் 24. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் , விண்ணப்பக் கட்டணமாக ரூ.200-க்கு (எஸ்சி, எஸ்டி எனில் ரூ.100) "The Director, Tamilnadu Institute of Labour Studies, Chennai" என்ற பெயரில் எடுக்கப்பட்ட டிமாண்ட் டிராப்டுடன், பதிவுத் தபால், விரைவு தபால் அல்லது கூரியர் மூலம் அனுப்ப வேண்டும்.

கூடுதல் விவரங்கள் அறிய, ஆசிரியர் குழு தலைவர் ஆர்.ரமேஷ் குமாரை 98841-59410 என்ற செல்போன் எண்ணில் தொடர்புகொள்ளலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x