Last Updated : 29 Jul, 2021 02:13 PM

 

Published : 29 Jul 2021 02:13 PM
Last Updated : 29 Jul 2021 02:13 PM

எல்லோருக்கும் கிடைக்கும் வகையில் கல்வி: மத்தியக் கல்வி அமைச்சர் அழைப்பு

புதுடெல்லி

எல்லோருக்கும் கிடைக்கும் வகையிலும் செலவு குறைவானதாகவும் கல்வியை மாற்றுவோம் என்று மத்தியக் கல்வி அமைச்சர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

புதிய தேசியக் கல்விக் கொள்கையை மத்திய அரசு கடந்த ஆண்டு ஜூலை 29-ம் தேதி அறிமுகம் செய்தது. தேசியக் கல்விக் கொள்கைக்குப் பல மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்த போதிலும், மத்திய அரசு அதை நாடு முழுவதும் படிப்படியாக அமல்படுத்தி வருகிறது.

தாய்மொழி வழிக் கல்வி, 10+2 என்ற பள்ளிப் பாடமுறை மாற்றப்பட்டு, 5+3+3+4 என்ற அடிப்படையில் 3 முதல் 8 வயது, 8 முதல் 11 வயது, 11 முதல் 14 வயது, மற்றும் 14-18 வயது ஆகிய மாணவர்களுக்காகப் பாடமுறை, பொதுத் தேர்வுகள், மழலையர் கல்வி உள்ளிட்ட பல அம்சங்கள் இதில் கூறப்பட்டிருந்தன.

இந்நிலையில் இன்று (ஜூலை 29) புதிய கல்விக் கொள்கை அறிமுகப்படுத்தப்பட்டு ஓராண்டு நிறைவு பெற்றுள்ளது. இதுகுறித்து மத்தியக் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறும்போது, ’’ஓராண்டுக்கு முன்பு இதே நாளில் பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் 21-ம் நூற்றாண்டின் தலைசிறந்த கல்விக் கொள்கை அறிமுகப்படுத்தப்பட்டது. அது ஒவ்வொரு மாணவரின் திறமைகளையும் வெளிப்படுத்துதல், கல்வியை உலகமயமாக்குதல், திறன்களை உருவாக்குதல் மற்றும் கற்றல் சூழலை மாற்றுதல் ஆகிய நோக்கங்களுடன் உருவாக்கப்பட்டது.

தேசியக் கல்விக் கொள்கை அறிமுகப்படுத்தப்பட்டு ஓராண்டு முடிவடைந்த நிலையில், கல்வியை முழுமையான, குறைவான செலவில் எல்லோருக்கும் கிடைக்கும் வகையில், அணுகக்கூடிய மற்றும் சமமானதாக மாற்றுவதற்கான எங்கள் தீர்மானத்தை மீண்டும் வலியுறுத்துவோம்.

புதிய கல்விக் கொள்கையின் அமலாக்கம் மற்றும் அம்சங்கள் குறித்தும் பல்வேறு முன்னெடுப்புகளைத் தொடங்கி வைக்கவும் பிரதமர் மோடி நாட்டு மக்களிடையே இன்று மாலை உரையாற்ற உள்ளார்" என்று மத்தியக் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதிவிட்டுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x