Last Updated : 29 Jul, 2021 12:53 PM

 

Published : 29 Jul 2021 12:53 PM
Last Updated : 29 Jul 2021 12:53 PM

முதல்வரின் கருத்துகளின் அடிப்படையில் தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்படும்: அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பேட்டி

தமிழக முதல்வர் தெரிவிக்கும் கருத்துகளின் அடிப்படையில் பள்ளிகள் திறப்பு குறித்து முடிவு எடுக்கப்படும் என, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

தஞ்சாவூர் அருகே கள்ளப்பெரம்பூர் பகுதியில் உள்ள செங்கழுநீர் ஏரியில் தூர்வாரும் பணியை இன்று (ஜூலை 29) காலை பார்வையிட்ட அவர் பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

"பள்ளிகளில் 9 முதல் 12-ம் வகுப்புகள் வரை திறப்பது குறித்து ஏற்கெனவே துறை ரீதியாக ஆலோசனை செய்யப்பட்டது. கரோனா மூன்றாவது அலை வந்தால் குழந்தைகள் பாதிக்கப்படுவர் எனக் கூறப்படுகிறது. கரோனா தடுப்பூசி 12 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இருந்தாலும், அது எந்த அளவுக்குப் பயனுள்ளதாக இருக்கும் எனத் தெரியவில்லை.

ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படும்போது எந்த அளவுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறதோ, அதே அளவுக்குப் பள்ளிகள் திறப்புக்கும் முக்கியத்துவம் அளிக்க வேண்டிய கட்டாய நிலை உள்ளது.
தமிழக முதல்வர் என்ன சொல்கிறாரோ, அதனடிப்படையில் பள்ளிகள் திறப்பு குறித்து முடிவு செய்யப்படும்.

பள்ளிகளில் காலிப் பணியிடங்களை நிரப்புவது குறித்து ஆலோசனை செய்யப்படுகிறது. அதற்கு முன்பாக பொது மாறுதல் கலந்தாய்வு நடத்தப்பட்டு, பணி நிரவல் செய்யப்பட்ட பிறகுதான் எங்கெங்கு காலிப் பணியிடங்கள் உள்ளன என்பது குறித்த விவரம் தெரியவரும். அதை அடிப்படையாகக் கொண்டு காலிப் பணியிடங்களை நிரப்புவது குறித்து முடிவு எடுக்கப்படும்.

தனியார் பள்ளிகளைப் போல அரசுப் பள்ளிகளையும் இரண்டு ஆண்டுகளில் மேம்படுத்துவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்".

இவ்வாறு அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x