Published : 28 Jul 2021 03:15 AM
Last Updated : 28 Jul 2021 03:15 AM

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவத்தைத் தொடர்ந்து பொறியியல் படிப்புகளிலும் உள்ஒதுக்கீடு வழங்க திட்டம்: இந்த ஆண்டிலேயே செயல்படுத்த தமிழக அரசு தீவிர ஆலோசனை

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பைத் தொடர்ந்து, பொறியியல் படிப்புகளிலும் உள்ஒதுக்கீடு வழங்க அரசு திட்டமிட்டு வருகிறது. மேலும், பொறியியல் விண்ணப்பத்தில் அரசுப் பள்ளியில்படித்த விவரமும் இந்த ஆண்டுமுதல்முறையாக கேட்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மருத்துவப் படிப்புக்கான நீட் நுழைவுத்தேர்வால் அரசுப் பள்ளி மாணவர்கள் பாதிக்கப்படாமல் இருப்பதற்காக அரசு மருத்துவக் கல்லூரிகளில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத உள்ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. இந்த சிறப்புஒதுக்கீடு கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. இதன்மூலம் அரசுப்பள்ளி மாணவர்கள் 400 பேருக்கு அரசு மருத்துவக் கல்லூரிகளில் இடம் கிடைத்தது.

இதற்கிடையே, பொறியியல் உள்ளிட்ட தொழிற்கல்வி படிப்புகளில் அரசுப் பள்ளி மாணவர்களின் சேர்க்கை அளவை ஆய்வு செய்து பரிந்துரை வழங்குவதற்காக அமைக்கப்பட்ட நீதிபதி முருகேசன்ஆணையம், தனது அறிக்கையை தமிழக அரசிடம் கடந்த வாரம் தாக்கல் செய்தது. தொழிற்படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்கள் 4 சதவீதம் மட்டுமே சேர்க்கை பெறுகின்றனர் என்றும், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்றும் அந்தஆணையம் பரிந்துரை வழங்கியது.

இதைத்தொடர்ந்து, பொறியியல் படிப்பில் அரசு பள்ளி மாணவர்கள் அதிகளவில் சேரும் வகையில் அவர்களுக்கு 7.5 சதவீதம் முதல் 10 சதவீதம் வரை உள்ஒதுக்கீடு வழங்க தமிழக அரசு திட்டமிட்டு வருகிறது.

இந்நிலையில், இந்த ஆண்டுக்கான பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான ஆன்லைன் பதிவுநேற்றுமுன்தினம் தொடங்கியது. முதல்நாள் அன்றே 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் விண்ணப்பித்தனர். பொறியியல் படிப்புக்கான விண்ணப்பத்தில் வழக்கமான தகவல்களுடன் கூடுதலாக இந்த ஆண்டு, அரசுப் பள்ளியில் படித்த விவரமும் கேட்கப்பட்டுள்ளது. மாணவர்கள் அரசு பள்ளியில் 6-ம் வகுப்பு முதல் பிளஸ் 2வரை படித்திருந்தால் அதுபற்றிகுறிப்பிடுவதற்கும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. எனவே, அரசுப் பள்ளி மாணவர்களுக்கான உள்ஒதுக்கீடு இந்த கல்வி ஆண்டில்இருந்தே நடைமுறைப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், நீட் தேர்வில் இருந்துதமிழகத்துக்கு விலக்கு பெறுவதற்கான சட்ட நடவடிக்கைகளை தமிழகஅரசு முழுவீச்சில் மேற்கொண்டு வருகிறது. ஒருவேளை இந்த முயற்சியில் வெற்றி கிடைக்காத சூழல் ஏற்பட்டால் மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு தற்போது வழங்கப்படும் 7.5 சதவீதஉள்ஒதுக்கீட்டை 10 சதவீதமாக அதிகரிக்கவும் அரசு திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x