Published : 27 Jul 2021 07:28 PM
Last Updated : 27 Jul 2021 07:28 PM

தேவகோட்டையில் கல்வி தொலைக்காட்சி கால அட்டவணையை மாணவர்கள் வீடுகளில் ஒட்டிய ஆசிரியர்கள்

தேவகோட்டை நடராஜபுரம் பகுதியில் உள்ள மாணவரின் வீட்டில் கல்வி தொலைக்காட்சி கால அட்டவணையை ஒட்டிய சேர்மன் மாணிக்கவாசகம் பள்ளி ஆசிரியர்கள்.

தேவகோட்டை

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் மாணவர்களின் வீடுகளுக்கே சென்று கல்வி தொலைக்காட்சி கால அட்டவணையை ஆசிரியர்கள் ஒட்டினர்.

தமிழகத்தில் கரோனா பரவலைத் தடுக்க பள்ளிகளுக்கு ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக விடுமுறை விடப்பட்டுள்ளது. இதையடுத்து மாணவர்களுக்கு இணையம் மூலம் வகுப்புகள் எடுக்கப்பட்டு வருகின்றனர்.

அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் பெரும்பாலும் ஏழைகளாக உள்ளதால், அவர்களிடம் மொபைல், லேப்டாப், டெஸ்க்டாப் போன்றவை இல்லை.

இதனால் அவர்களால் இணையவழி வகுப்புகளில் பங்கேற்க முடியவில்லை. இதையடுத்து அவர்கள் கல்வி தொலைக்காட்சி மூலம் கல்வி கற்று வருகின்றனர். இணையம் மூலம் வகுப்பு நடத்துவோர் முறையாக வகுப்புக்கான கால அட்டவணையை வாட்ஸ்அப் மூலம் அனுப்பிவிடுகின்றனர். இதனால் அவர்கள் வகுப்புகளை முறையாக கவனிக்கின்றனர்.

ஆனால் அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களில் கல்வி தொலைக்காட்சியில் வரும் கால அட்டவணையை முறையாக கண்காணிப்பதில்லை. இதனால் வகுப்புகளை முறையாக கவனிப்பதில்லை.

இதையடுத்து தேவகோட்டை சேர்மன் மாணிக்கவாசகம் நடுநிலைப் பள்ளி தலைமைஆசிரியர் சொக்கலிங்கம் மற்றும் ஆசிரியர்கள் தங்களது பள்ளி மாணவர்களின் வீடுகளுக்கு சென்று, அவர்கள் கண்ணில்படும்படி கல்வித் தொலைக்காட்சி கால அட்டவணையை ஒட்டி வருகின்றனர்.

மேலும் பாட ஒப்படைகள் (வீட்டு பாடம்) முறையாக செய்கின்றனரா என்பதையும் வீடு, வீடாக சென்று கண்காணித்து வருகின்றனர். இது பெற்றோரிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x