

ஜேஇஇ அட்வான்ஸ்டு நுழைவுத் தேர்வு வரும் அக்டோபர் 3-ம் தேதி நடத்தப்படும் என்று மத்தியக் கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் அறிவித்துள்ளார்.
ஐஐடி, என்ஐடி உள்ளிட்ட மத்திய உயர் கல்வி நிறுவனங்களில் பொறியியல் படிப்புகளில் சேர ஜேஇஇ நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. இவை ஜேஇஇ மெயின், ஜேஇஇ அட்வான்ஸ்டு என இரண்டு கட்டங்களாக நடத்தப்படுகின்றன. மேற்குறிப்பிட்ட கல்வி நிறுவனங்களில் சேர ஜேஇஇ தேர்வுகளில் தேர்ச்சி பெற வேண்டியது கட்டாயம்.
இந்த ஆண்டு முதல், ஜேஇஇ மெயின் 2021 தேர்வு ஆண்டுக்கு 4 முறை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. முதல் கட்டமாக பிப்ரவரி மாதம் 23 முதல் 26ஆம் தேதி வரை தேர்வு நடைபெற்றது. இரண்டாவது கட்டமாக மார்ச் மாதத்தில் தேர்வு நடைபெற்றது. அதைத் தொடர்ந்து இரண்டாவது அலை காரணமாக ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நடைபெற இருந்த ஜேஇஇ மெயின் 2021 தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டன.
இந்த நிலையில் 2021 ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வுகளும் ஜூலை 3-ம் தேதி தொடங்குவதாக இருந்து, கரோனா காரணமாக ஒத்திவைக்கப்பட்டன. இந்நிலையில் தேர்வு வரும் அக்டோபர் 3-ம் தேதி நடத்தப்படும் என்று மத்தியக் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ’’ஐஐடிகளில் சேர நடத்தப்படும் நுழைவுத் தேர்வான ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வு அக்டோபர் 3-ம் தேதி நடத்தப்படும். அனைத்து கரோனா விதிமுறைகளையும் பின்பற்றித் தேர்வுகள் நடைபெறும்’’ என்று அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.