

கடலூரில் காவலருக்கான முதல் கட்ட உடல் தகுதித் தேர்வு இன்று தொடங்கியது.
கடலூரில் தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் காவல் துறை, சிறைத் துறை ஆகிய துறைகளுக்கான இரண்டாம் நிலைக் காவலருக்கான முதல் கட்ட உடல் தகுதித் தேர்வு இன்று அண்ணா விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. டிஐஜி எழிலரசன் மேற்பார்வையில் கடலூர் எஸ்பி சக்தி கணேசன் தலைமையில் இந்தத் தேர்வு நடத்தப்பட்டது. இதில் கடலூர் மாவட்டத்தில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.
அவர்களுக்கு உயரம், மார்பளவு, எடை, ஓட்டப் பந்தயம் போன்ற முதல்கட்ட உடல் தகுதித் தேர்வு நடைபெற்றது. முன்னதாக இந்தத் தேர்வில் பங்கேற்ற அனைவரும் கரோனா தொற்று இல்லை என்ற சான்றிதழுடன் கலந்துகொண்டனர்.
மைதானத்திற்கு வந்த தேர்வாளர்களுக்கு உடல் பரிசோதனை செய்யப்பட்டு கிருமிநாசினி அளிக்கப்பட்டு, உள்ளே அனுமதிக்கப்பட்டனர். இத்தேர்வு தொடர்ந்து ஒரு வாரத்திற்கு மேல் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.