Published : 25 Jul 2021 03:13 AM
Last Updated : 25 Jul 2021 03:13 AM

‘இந்து தமிழ் திசை’, அம்ரிதா விஷ்வ வித்யாபீடம் உடன் இணைந்து வழங்கும் ‘உயர்வுக்கு உயர்கல்வி’ - கிளவுட் கம்ப்யூட்டிங், சைபர் செக்யூரிட்டி படிப்புகளுக்கு ஏராளமான வாய்ப்புகள்: ஆன்லைன் வழிகாட்டி நிகழ்ச்சியில் துறை வல்லுநர்கள் தகவல்

சென்னை

தொழில்நுட்பம் வேகமாக வளர்ந்து வரும் இந்த காலகட்டத்தில் கிளவுட்கம்ப்யூட்டிங், சைபர் செக்யூரிட்டி படிப்புகளுக்கு தேவையும், வாய்ப்புகளும் குவிந்துள்ளன என்று ‘இந்துதமிழ் திசை’ நாளிதழ், அம்ரிதா விஷ்வ வித்யாபீடம் இணைந்து நடத்தும் ‘உயர்வுக்கு உயர்கல்வி’ ஆன்லைன் வழிகாட்டி நிகழ்ச்சியில் வல்லுநர்கள் தெரிவித்தனர்.

பிளஸ் 2 முடித்துள்ள மாணவர்கள் பயன்பெறும் வகையில் ‘இந்து தமிழ் திசை’ நாளிதழும், அம்ரிதா விஷ்வ வித்யாபீடமும் இணைந்து ‘உயர்வுக்கு உயர்கல்வி’ என்றதொடர் நிகழ்ச்சியை ஆன்லைனில் நடத்துகின்றன. கடந்த 10-ம் தேதிதொடங்கிய இந்த நிகழ்ச்சி, இன்னும் 11 நாட்கள் நடக்க உள்ளது. கடந்த 23-ம் தேதி நடந்த 6-வது நிகழ்வில் ‘கிளவுட் கம்ப்யூட்டிங், சைபர் செக்யூரிட்டி படிப்புகள்’ என்றதலைப்பில் இத்துறை வல்லுநர்கள் உரையாற்றியதாவது:

சென்னை சவீதா இன்ஜினீயரிங் காலேஜ் கம்ப்யூட்டர் சயின்ஸ் துறைத் தலைவர் பேராசிரியர் டாக்டர் ஜி.நாகப்பன்: அலுவலகங்களில் டேட்டா சேகரிப்பதற்கு என்றே கூடுதலான இடம், ஆட்கள் முன்பு இருந்தனர். இன்று கிளவுட் கம்ப்யூட்டிங் வந்த பிறகு, நம் டேட்டாக்களை சேகரிப்பதற்கு என்றே பிரத்யேகமான நிறுவனங்கள் வந்துவிட்டன.

நாம் வைத்துள்ள டேட்டாக்களை யாரும் தவறாகப் பயன்படுத்திவிடாமல் இருக்க, சைபர் செக்யூரிட்டி மிகவும் அவசியம். இதற்காகபுதுப்புது உத்திகளை சைபர் செக்யூரிட்டி மூலம் கையாண்டு, நமது டேட்டாக்களைப் பாதுக்கவேண்டி உள்ளது. இன்றைய நவீன தொழில்நுட்ப வளர்ச்சியில் கிளவுட் கம்ப்யூட்டிங், சைபர் செக்யூரிட்டி ஆகியபடிப்புகளுக்கு தேவையும், வாய்ப்புகளும் ஏராளமாக குவிந்துள்ளன.

சென்னை கிளஸ்ட்ரெக்ஸ் டேட்டாநிறுவனத்தின் நிறுவனர் பி.வெங்கட்ரமணி: கிளவுட் கம்ப்யூட்டிங் தொழில்நுட்பம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த துறையாக இன்றுவளர்ந்திருக்கிறது. கிளவுட் கம்ப்யூட்டிங், சைபர் செக்யூரிட்டி படிப்புகளை எடுப்பது மாணவர்களுக்கு சிறப்பான எதிர்காலத்தை அமைத்துத் தரும். இன்று செல்போனைஅனைவருமே பயன்படுத்துகின்றனர். இ-மெயில் பயன்படுத்தாதவர்கள் மிகவும் குறைவு. வரும் காலங்களில் இவற்றின் பயன்பாடு இன்னும் அதிகமாகும். சைபர் செக்யூரிட்டி இல்லாமல் இனி முடியாது என்ற அளவில் அதன் தேவை மிகவும் கூடுதலாகியுள்ளது.

அனைத்து வியாபார பெரு நிறுவனங்களும் ஆன்லைன் வர்த்தகத்தில் இறங்கியுள்ளன. வீட்டில் இருந்தபடியே நமக்கானஉணவுப் பொருள், மருந்துகளை ஆன்லைனில் பெறுகிறோம். பயணங்களுக்கும் ஆன்லைனில் பதிவு செய்கிறோம். திரைப்படங்கள் பார்க்கவும் அமேசான்,நெட்ஃபிளிக்ஸ் ஆகியவை வந்துவிட்டன. இத்துறையின் வேகமாக வளர்ச்சியால் வருங்காலத்தில் நிறைய வேலைவாய்ப்புகள் உருவாகும்.

சென்னை சிடிஎஸ் சீனியர் இயக்குநர் வி.எஸ்.காந்த்: கிளவுட் கம்ப்யூட்டிங் படிப்புக்கான தேவையும்,வேலைவாய்ப்பும் அதிகரித்துக்கொண்டே வருகிறது. கரோனா போன்ற பெருந்தொற்று காலத்தில் அனைத்து தொழில்களும் பெரிய அளவில் பாதிப்பை சந்தித்துள்ளன. ஆனால், ஐ.டி. துறை மட்டும்தான் தடையின்றி இயங்கி வருகிறது. தங்களது தகவல்களை மிகவும் பாதுகாப்பாக வைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் அதற்கென சிறப்பான ஏற்பாடுகளை பெரிய நிறுவனங்கள் திட்டமிடுகின்றன. அதற்கு, புதுமையான முறையில் நுட்பமாக சிந்திக்கும் ஆற்றல் உடைய சைபர் செக்யூரிட்டி சிஸ்டம் தேவைப்படுகிறது.

இன்றைய இளைய தலைமுறையினர் அவர்களை அறியாமலேயே தங்களைப் பற்றிய தகவல்களை செல்போன் வழியாகவும், இ-மெயில் வழியாகவும் அனைவருக்கும் எப்படியாவது தெரியப்படுத்தி விடுகின்றனர். இதனால்,வங்கிக் கணக்கில் இருந்து தொழில்நுட்ப ரீதியாக பணம் திருடப்படுகின்றன. நம் தகவல்களைப் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும்என்ற விழிப்புணர்வு அனைவருக்கும் அவசியம். புதிய சிந்தனையும், நுட்பமான திறனும் கொண்டவர்களுக்கு இத்துறைகளில் ஏராளமான வாய்ப்புகள் இருக்கின்றன.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

இந்த ஆன்லைன் வழிகாட்டி நிகழ்ச்சியை ‘இந்து தமிழ் திசை’நாளிதழின் முதுநிலை துணைஆசிரியர் ம.சுசித்ரா நெறிப்படுத்தினார்.

இந்த நிகழ்ச்சியை சவீதா இன்ஜினீயரிங் காலேஜ், சென்னை இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி, ஈஸ்வர் காலேஜ் ஆஃப் இன்ஜினீயரிங் ஆகியவை இணைந்து வழங்கின. இந்த நிகழ்வில் பங்கேற்க தவறியவர்கள் https://bit.ly/36ZIBR8 என்ற லிங்க் மூலம் முழு நிகழ்வையும் பார்க்கலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x