Published : 24 Jul 2021 03:12 AM
Last Updated : 24 Jul 2021 03:12 AM

ரஷ்யாவில் உயர்கல்வி வாய்ப்புகள் குறித்து ஆக.1-ல் இணையவழியில் கல்விக் கண்காட்சி

சென்னை

ரஷ்ய பல்கலைக்கழகங்களில் மருத்துவம் உள்ளிட்ட உயர்கல்வி படிப்புகள் குறித்த கல்விக் கண்காட்சி இணையவழியில் ஆக.1-ம் தேதி நடக்கிறது.

சென்னையில் உள்ள ரஷ்ய அறிவியல் மற்றும் கலாச்சார மையம் (ஆர்சிஎஸ்சி) சார்பில் ரஷ்ய பல்கலைக்கழகங்களில் உயர்கல்வி பயில்வதற்கான வாய்ப்புகள் குறித்த பத்திரிகையாளர் சந்திப்பு இணையவழியில் நேற்று நடந்தது. இதில் தென்னிந்தியாவுக்கான ரஷ்ய துணைத் தூதர் ஒலெக் என்.அவ்தீவ் பேசியதாவது:

மாணவர்களுக்கு நேரடி பயிற்சி

கரோனா பரவலால் ரஷ்யாவில் மருத்துவம் பயிலும் இந்திய மாணவர்கள் அந்த நாட்டுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து மாணவர்கள் மற்றும்ஆசிரியர்கள் பரிமாற்றத் திட்டத்தின்கீழ் இந்திய மாணவர்கள், நேரடி பயிற்சி பெற ஏதுவாக இந்திய மருத்துவக் கல்வி மையங்களுடன் கூட்டு ஒப்பந்தம் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.

இதற்காக டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகம் உட்பட பல்வேறு கல்வி நிறுவனங்களுடன் பேசிவருகிறோம். இதன்மூலம் மாணவர்களின் கல்வி மற்றும் ஆய்வுப் பணிகள் பாதிக்கப்படுவது தவிர்க்கப்படும். மேலும், ரஷ்யகல்வி நிறுவனங்களில் பொறியியல் மற்றும் மருத்துவப் பட்டப்படிப்பு வாய்ப்புகள் பற்றி இந்திய மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஆகஸ்ட் 1-ம் தேதி www.rusedufair.com என்ற இணையதளத்தில் மெய்நிகர் கல்விக்கண்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதன் வாயிலாக ரஷ்ய பல்கலைக்கழகங்களில் உயர்கல்வி வாய்ப்புகள், உதவித்தொகை உள்ளிட்ட விவரங்களை அறிந்து கொள்ளலாம். இந்த கல்விக் கண்காட்சி பற்றிய விவரங்களுக்கு மாணவர்கள் 92822 21221 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் .

பிற நாடுகளைவிட குறைந்த செலவில் ரஷ்யாவில் மருத்துவப் படிப்புகளை பயில முடியும். தற்போது ரஷ்யாவில் 15 ஆயிரம் இந்திய மாணவர்கள் மருத்துவக் கல்வி படித்து வருகின்றனர். இதற்கு நீட் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றிருந்தால் போதும்.

சேர்க்கை இடங்கள் அதிகரிப்பு

ரஷ்ய கல்லூரிகளில் 2021 கல்வியாண்டில் இளநிலை, முதுநிலை படிப்புக்கான மாணவர் சேர்க்கை நடந்துவருகிறது. பயணக் கட்டுப்பாடுகள் விலகும்வரைமாணவர்களுக்கு இணையவழியில் பாடங்கள் நடத்தப்படும். இந்திய மாணவர்களுக்கான சேர்க்கை இடங்களின் எண்ணிக்கை 5 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த நிகழ்வில் ஆர்சிஎஸ்சி இயக்குநர் கென்னடி ஏ.ரகலேவ், வெளிநாடுகளில் உயர்கல்வி பயில்வதற்கான ஆலோசனை நிறுவன இயக்குநர் சி.ரவிச்சந்திரன் மற்றும் ரஷ்யாவின் பல்வேறு பல்கலைக்கழகங்களின் முதல்வர் கள் கலந்துகொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x