Published : 20 Jul 2021 02:59 PM
Last Updated : 20 Jul 2021 02:59 PM

புற ஊதாக் கதிர் விளக்கு மூலமாக ரூபாய் நோட்டுகளில் படர்ந்துள்ள கிருமித்தொற்றை அழிக்கும் பெட்டகம்:  அரசுப் பள்ளி மாணவி வடிவமைப்பு  

ரூபாய் நோட்டுகளில் படர்ந்துள்ள கிருமித் தொற்றுகளை எளிதாக அழிக்கும் புற ஊதாக் கதிர் விளக்குப் பெட்டகத்தை அறிவியல் ஆசிரியர் தமிழ்கனி வழிகாட்டுதலுடன் குப்பனத்தம் அரசு உயர்நிலைப் பள்ளியின் பத்தாம் வகுப்பு மாணவி சத்யா வடிவமைத்துள்ளார்.

உலகை அச்சுறுத்தி வரும் கரோனா தொற்றில் இருந்து முழுமையாக மீண்டுவர முடியாமல் மக்கள் தவித்து வருகின்றனர். கரோனா பரவலைக் கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் மற்றும் சுகாதாரத் துறையினர் பல கட்ட முயற்சிகளை மேற்கொண்டும், வெற்றி காண முடியவில்லை. கரோனா தொற்று பல வடிவங்களில் பரவி வருவதாகக் கூறப்பட்டாலும், அனைத்து நிலைகளில் உள்ள மக்களால் நொடிக்கு நொடி பயன்படுத்தும் ரூபாய் நோட்டுகள் மூலமாகப் பரவலாம் என்ற அச்சம், ஒவ்வொருவரது ஆழ்மனதில் இருந்தும் விலகிச் செல்லவில்லை. இதனால், மற்றவர்களிடம் இருந்து பெறப்படும் ரூபாய் நோட்டுகளை, வெயிலில் சிறிது நேரம் வைத்துவிட்டு, அதன்பிறகு பயன்படுத்துபவர்களைக் காணலாம்.

இதற்கான தீர்வை எளிதாக வடிவமைத்துள்ளது, திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த குப்பனத்தம் அரசு உயர்நிலைப் பள்ளியின் அறிவியல் குழு. புற ஊதாக் கதிர் விளக்கை பயன்படுத்தி, 7 விநாடிகளில் கிருமித் தொற்றை அழித்துவிடலாம் என அறிவியல் குழு தெரிவிக்கிறது. அதே நேரத்தில், புற ஊதாக் கதிர் விளக்கை, மிகவும் எச்சரிக்கையுடன் கையாள வேண்டும் என எச்சரிக்கிறது. புற ஊதாக் கதிர் ஒளியானது மனித உடலில் நேரடியாகப் படும்போதும், கண்களால் பார்க்கும்போதும் ஆபத்தை ஏற்படுத்தும் என எச்சரிக்கை விடுத்துள்ளது.

படைப்பு குறித்து அறிவியல் ஆசிரியர் தமிழ்கனி கூறும்போது, "கரோனா ஊரடங்கு காலத்தில் நேரத்தை வீணடிக்காமல், பயனுள்ளதாக அமைத்துக் கொள்ள வேண்டும் என மாணவர்களை அறிவுறுத்தி வருகிறோம். அப்போது, பத்தாம் வகுப்பு மாணவி சத்யா என்பவர், ரூபாய் நோட்டு மூலம் கரோனா தொற்று பரவும் என்ற அச்சத்தில் இருந்து மக்களை, எவ்வாறு விடுவிப்பது எனக் கேள்வி எழுப்பினார். அதன் எதிரொலியாக, புற ஊதாக் கதிர் விளக்குப் பெட்டகம் வடிவமைப்பது எனத் திட்டமிட்டோம். கேள்வி எழுப்பிய மாணவியைக் கொண்டு ஆய்வுப் பணி தொடங்கப்பட்டது" என்றார்.

மாணவி சத்யா கூறும்போது, "எங்களது படைப்புக்காக புற ஊதாக் கதிர் விளக்கை வாங்கி வந்தோம். பின்னர், சிறிய மரப்பெட்டியை உருவாக்கி, அதன் உள்ளே உள்ள கீழ்ப் பகுதியில் புற ஊதாக் கதிர் விளக்கைப் பொருத்தினோம். இதில், புற ஊதாக் கதிரின் ஒளி, ஒரு திசையில் மட்டும் பட்டது. இதனால், முகம் பார்க்கும் கண்ணாடியைப் பெட்டியின் உள்ளே 4 திசைகளில் பொருத்தினோம். இதன்மூலம், புற ஊதாக் கதிர் ஒளியானது 4 திசைகளிலும் எதிரொலிக்கிறது.

மேலும், பெட்டியைத் திறக்கும்போது, புற ஊதாக் கதிர் இயங்காது. நமது மீது பட்டுவிட்டால் பக்க விளைவு ஏற்படும் என்பதால், அவ்வாறு வடிவமைக்கப்பட்டுள்ளது. மூடிய நிலையில், புற ஊதாக் கதிர் விளக்கு பெட்டகம் இயங்கும். பெட்டியின் உள்ளே ரூபாய் நோட்டுகளைப் போட்டுவிட்டால், அதில் படர்ந்திருக்கும் கிருமித் தொற்றுகளை 7 விநாடிகளில் புற ஊதாக் கதிர் ஒளி அழித்துவிடும். இதன் மூலம், பல நன்மைகள் கிடைக்கின்றன. இதனை தமிழக அரசு அங்கீகரித்து, கடைகள், பொது இடங்களில் பயன்படுத்தினால், கரோனா தொற்று அச்சம் நீங்கும்" என்றார்.

மேலும், அறிவியல் ஆசிரியர் தமிழ்கனி கூறும்போது, "கிருமித் தொற்றுகளை எளிதாக அழிக்கும் ஆற்றல் மிக்கது புற ஊதாக் கதிர் விளக்கு. குடிநீர் சுத்திகரிப்பு, துணிகள் சுத்தம் செய்தல் போன்ற தேவைக்குப் புற ஊதா கதிரைப் பயன்படுத்தி வருகின்றனர். நாங்கள், ரூபாய் நோட்டுகளில் படர்ந்துள்ள கிருமித் தொற்றுகளை அழிக்கப் பயன்படுத்தி உள்ளோம். ரூபாய் நோட்டுகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. புற ஊதாக் கதிர் விளக்கு பெட்டகம் வடிவமைப்பதற்கான செலவு ரூ.1,500 தான். ரூபாய் நோட்டுகள் மட்டும் இல்லாமல் பிஸ்கட், காய்கறி உள்ளிட்ட பொருட்களை உள்ளே வைத்தால், அவற்றின் மீது படர்ந்துள்ள கிருமித் தொற்றுகள் அழிக்கப்படும். நமது தேவைக்கு ஏற்ப பெரிய வடிவிலும் பெட்டியை வடிவமைக்கலாம். எங்களது முயற்சிக்குத் தலைமை ஆசிரியர் அண்ணாமலை உறுதுணையாக இருந்தார்" எனத் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x