கரோனா: பெற்றோரை இழந்த குழந்தைகளின் கல்விக்கு எடுத்த நடவடிக்கை என்ன?- மத்திய அரசு பதில்

கரோனா: பெற்றோரை இழந்த குழந்தைகளின் கல்விக்கு எடுத்த நடவடிக்கை என்ன?- மத்திய அரசு பதில்
Updated on
1 min read

கரோனா காரணமாக பள்ளிக் கல்வியைக் கைவிட்ட மற்றும் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு ஆதரவளிக்க அரசு எடுத்த நடவடிக்கைகள் என்னென்ன என்பது குறித்து மத்தியக் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தின் மக்களவையில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் எழுத்துப்பூர்வமாகப் பதிலளித்ததாவது:

''மாநிலங்கள்/ யூனியன் பிரதேசங்களால் அடையாளம் காணப்பட்ட, பள்ளியில் இருந்து இடைநின்ற குழந்தைகள் குறித்த தகவல்களைத் திரட்டவும், பிரபந்த் தளத்தில் உள்ள சிறப்புப் பயிற்சி மையங்களோடு அவர்களை இணைக்கவும் ஆன்லைன் முறை ஒன்றை, பள்ளிக் கல்வி மற்றும் படிப்பறிவுத் துறை உருவாக்கியுள்ளது.

சமக்ரா சிக்‌ஷா திட்டத்தின் கீழ் 2021-22ஆம் கல்வி ஆண்டில் முதல் முறையாக 16-19 வயதுப் பிரிவில் உள்ள, பள்ளிக் கல்வியைக் கைவிட்ட குழந்தைகளுக்கு ஆதரவளிப்பதற்காக வருடத்திற்கு ரூ2,000 வரை நிதியுதவி வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

இதன் மூலம் தேசிய திறந்தவெளி பள்ளி அமைப்பு மற்றும் மாநில திறந்தவெளி பள்ளி அமைப்பு மூலம் அவர்கள் கல்வியை நிறைவு செய்ய இயலும். கோவிட்-19 காரணமாக பெற்றோரை இழந்த குழந்தைகளுக்குக் கல்வி வழங்குவதற்காக பள்ளிக் கல்வி மற்றும் படிப்பறிவுத் துறை மற்றும் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் ஆகியவை இணைந்து 2021 ஜூன் 16 தேதியிட்ட கடிதம் ஒன்றை வெளியிட்டுள்ளன.

கோவிட்-19 காரணமாக பெற்றோரை இழந்த குழந்தைகள் பள்ளிக்கல்வி மற்றும் படிப்பறிவுத் துறையின் பல்வேறு திட்டங்களின் கீழ் கொண்டுவரப்படுவார்கள். சமக்ர சிக்‌ஷா திட்டத்தின் கீழ், பட்டியல், பழங்குடி, இதர பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் மற்றும் வறுமைக்கோட்டுக்குக் கீழுள்ள பெண் குழந்தைகளுக்காக ஆறு முதல் 12-ம் வகுப்பு வரையிலான உறைவிடப் பள்ளிகள் கஸ்தூரிபாய் காந்தி பாலிகா வித்யாலயா எனும் பெயரில் நடத்தப்படுகின்றன.

நாடு முழுவதும் 5,726 கஸ்தூரிபாய் காந்தி பாலிகா வித்யாலயா பள்ளிகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ள நிலையில், 5010 கஸ்தூரிபாய் காந்தி பாலிகா வித்யாலயா பள்ளிகள் 6.54 லட்சம் பெண் குழந்தைகளுடன் செயல்பட்டு வருகின்றன.

மாற்றுத் திறனாளி மாணவிகளுக்கு உதவித்தொகை வழங்கப்படுகிறது, தற்காப்பு உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள் மாணவிகளுக்கு வழங்கப்படுகின்றன. உயர்கல்வியில் சிறந்து விளங்கும் மாணவர்களுக்கான மத்தியக் கல்வி உதவித்தொகை திட்டத்தில், 50 சதவீதம் மாணவிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது''.

இவ்வாறு மத்தியக் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in