

சிவகங்கையில் கயிறு ஏறுதலில் 20 அடியை 36 விநாடியில் கடக்கும் சிறுவனின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
சாதிப்பதற்கு வயது தடையில்லை என்று கூறுவர். அந்த வகையில் சிவகங்கையைச் சேர்ந்த 5 வயதுச் சிறுவன் கயிறு ஏறுதலில் சாதனை படைத்து வருகிறார்.
சிவகங்கை, சூராக்குளத்தைச் சேர்ந்த வினோத்குமார், கற்பகவள்ளி தம்பதியின் மகன் சாலிவாகனன் (5). மூன்று வயதில் இருந்தே கயிறு ஏறுவதில் ஆர்வம் காட்டி வரும் இச்சிறுவன் தற்போது கயிறு ஏறுதலில் 20 அடி உயரத்தை 36 விநாடியில் கடக்கிறார். அவர் வேகமாகக் கயிறு ஏறும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அவரது சாதனையை அனைத்துத் தரப்பினரும் பாராட்டி வருகின்றனர்.
இதுகுறித்து சிறுவனின் தந்தை வினோத்குமார் கூறும்போது, ''எங்கள் குழந்தைகள் யாழரசி, சாலிவாகனன் ஆகியோருக்காக மரத்தில் சேலையால் ஊஞ்சல் கட்டினேன். ஆனால் சாலிவாகணன் ஊஞ்சலில் ஆடாமல், மேலே ஏறுவதிலேயே ஆர்வம் காட்டினான்.
இதை கவனித்த நான் மரத்தில் கயிற்றைக் கட்டி, அதில் சாலிவாகணனை ஏற வைத்தேன். வேகமாகக் கயிறு வழியாக மரத்தில் ஏறினான். அவனது வேகத்தைப் பார்த்து ஆச்சரியப்பட்டேன். ஏற்கெனவே 60 விநாடியில் 20 அடி உயரத்தை 6 வயது சிறுவன் கடந்ததாகக் கேள்விப்பட்டேன். ஆனால் எனது மகன் 36 விநாடியில் 20 அடி உயரத்தை கடந்துள்ளான் என்பது எனக்குப் பெருமையாக உள்ளது'' என்று தெரிவித்தார்.