Published : 19 Jul 2021 12:52 PM
Last Updated : 19 Jul 2021 12:52 PM

பிளஸ் 2 மாணவர்கள் 100% தேர்ச்சி: அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தகவல்

அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி: கோப்புப்படம்

சென்னை

பிளஸ் 2 மதிப்பெண்கள் வெளியிடப்பட்டுள்ள நிலையில், 100% மாணவர்கள் தேர்ச்சி அடைந்துள்ளதாக, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கரோனா பரவல் காரணமாக, பிளஸ் 2 தேர்வு ரத்து செய்யப்பட்டு, மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி செய்யப்படுவதாக அரசு அறிவித்தது. இதையடுத்து, 10, 11-ம் வகுப்பு பொதுத் தேர்வில் 70 சதவீதம், பிளஸ் 2 செய்முறைத் தேர்வில் 30 சதவீதம் என்ற விகிதத்தில் மாணவர்களுக்கு இறுதி மதிப்பெண் கணக்கிடப்பட்டது.

இன்று காலை (ஜூலை 19) 11 மணி அளவில், நுங்கம்பாக்கத்தில் உள்ள டிபிஐ அலுவலகத்தில், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பிளஸ் 2 மதிப்பெண்களை வெளியிட்டார்.

அப்போது, அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி செய்தியாளர்களிடம் பேசியதாவது:

"பிளஸ் 2 பொதுத் தேர்வு நடத்தலாமா, வேண்டாமா என்பது குறித்து மருத்துவ நிபுணர்கள், கல்வியாளர்கள், மாணவர்கள், பெற்றோர்கள், அனைத்துக் கட்சி எம்எல்ஏக்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரிடம் கருத்துக் கேட்பு நடத்தி முதல்வரிடம் அறிக்கையைச் சமர்ப்பித்தோம். ஒரு மாணவர் கூட பாதிக்கப்படக் கூடாது என்பதன் அடிப்படையில், பிளஸ் 2 தேர்வை ரத்து செய்து 05.06.2021 அன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆணை பிறப்பித்தார்.

மதிப்பெண்களைக் கணக்கிடுவது குறித்து ஆய்வு செய்ய 10.06.2021 கமிட்டி ஒன்று அமைக்கப்பட்டது. 2 வாரங்களாகப் பலவிதமான மதிப்பெண் கணக்கீட்டு முறைகளை வாங்கினார்கள். எந்த மாணவரும் பாதிக்காத வகையிலான கணக்கீட்டு முறையை 12.07.2021 அன்று முதல்வர் தேர்ந்தெடுத்து வழங்கினார். குழு அறிக்கையைச் சமர்ப்பித்த நாள் 25.06.2021.

இன்று பிளஸ் 2 மதிப்பெண்கள் வெளியிடப்பட்டுள்ளன. ஜூலை 31-ம் தேதிக்குள் மதிப்பெண் பட்டியல் வழங்கப்படும் என சிபிஎஸ்இ தெரிவித்திருந்தது. மதிப்பெண் பட்டியலை வேகமாக வழங்க வேண்டும் என, முதல்வர் உத்தரவிட்டிருந்தார். பள்ளிக் கல்வித்துறையினர் அறிவியல்பூர்வமாக மதிப்பெண்களைக் கணக்கிட்டுள்ளனர்.

10, 11-ம் வகுப்பு பொதுத்தேர்வு மதிப்பெண்கள் ஏற்கெனவே இணையதளத்தில் உள்ளன. அதனால் மதிப்பெண்களைக் கணக்கிடுவது சிரமமான வேலை அல்ல. வரும் 22-ம் தேதி மதிப்பெண் பட்டியல் வழங்கப்படும். மாணவர்கள் அதனை டவுன்லோட் செய்துகொள்ளலாம்.

கரோனா காலமாக இருந்தாலும், கல்வியைப் பொறுத்தவரையில் சரியான முடிவைச் சரியான நேரத்தில் முதல்வர் எடுத்துள்ளார்.

இந்த ஆண்டு 100 சதவீதம் தேர்ச்சி வந்திருக்கிறது. மொத்தமாக, 8,18,129 மாணவர்களின் மதிப்பெண்கள் கணக்கிடப்பட்டுள்ளன. 11-ம் வகுப்பில் எந்த தேர்வுக்கும் வராத 1,656 மாணவர்கள் தேர்ச்சி பெறாதவர்களாக இருக்கிறார்கள். தேர்ச்சி பெற்றவர்களின் எண்ணிக்கை 8,16,473. தேர்ச்சி சதவீதம் 100 சதவீதம்.

பிளஸ் 1 வகுப்பில் தேர்ச்சி பெறாத 33,557 மாணவர்களையும் தேர்ச்சி பெற்றவர்களாக அறிவித்துள்ளோம்".

இவ்வாறு அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x