Published : 19 Jul 2021 03:12 AM
Last Updated : 19 Jul 2021 03:12 AM

நீட் தகுதித் தேர்வுக்கான விண்ணப்பப் பதிவு - மாணவர்களுக்கு உதவ தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித் துறை அறிவுறுத்தல்

சென்னை

நீட் தேர்வு எழுதும் மாணவர்கள் விண்ணப்பிக்க பள்ளித் தலைமை ஆசிரியர்கள் உதவ வேண்டும் என்று பள்ளிக்கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது.

இளநிலை மருத்துவப் படிப்புகளில் சேர நீட் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறவேண்டும். அதன்படி, நடப்பாண்டுக்கான நீட் தேர்வு செப்டம்பர் 12-ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான விண்ணப்பப் பதிவு கடந்த ஜூலை 13-ம் முதல் நடைபெற்று வருகிறது. தற்போது மாணவர்கள் பலரும் ஆர்வமுடன் ntaneet.nic.in என்ற இணையதளம் வழியாக நீட் தேர்வுக்கு விண்ணப்பித்து வருகின்றனர்.

இந்நிலையில், மாணவர்கள் நீட் தேர்வுக்குப் பதிவு செய்ய, பள்ளித் தலைமை ஆசிரியர்கள் உதவ வேண்டும் என்று பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக பள்ளிக்கல்வி இயக்குநரம் சார்பில் அனைத்துப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்கள்:

நீட் தேர்வுக்கான விண்ணப்பப் பதிவு ஆக.6-ம் தேதி வரை நடைபெற உள்ளது. நீட் தேர்வு எழுத உள்ள மாணவர்களுக்குத் தேவையான வழிகாட்டுதல்களை வழங்குவதுடன், விண்ணப்பிக்கவும் தலைமை ஆசிரியர்கள் உதவ வேண்டும். அனைத்து மாணவர்களையும் ஒன்றிணைத்து, பள்ளிகள் வாயிலாக பிழையின்றி விண்ணப்பிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்பும் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்கள், தங்கள் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களை தொடர்புகொண்டு பயன் பெறலாம். இந்தப் பணிகளின்போது கரோனா வழிமுறைகளைப் பின்பற்றி செயல்பட வேண்டும். இவ்வாறு பள்ளிக்கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x