Last Updated : 17 Jul, 2021 01:54 PM

 

Published : 17 Jul 2021 01:54 PM
Last Updated : 17 Jul 2021 01:54 PM

வழிகாட்டும் தத்துவம்; புதிய கல்விக் கொள்கையை விரைந்து அமலாக்க வேண்டும்: மத்தியக் கல்வி அமைச்சர் பேச்சு

புதுடெல்லி

புதிய கல்விக் கொள்கை வெறும் ஆவணம் அல்ல. அதுவொரு வழிகாட்டும் தத்துவம் என்று குறிப்பிட்ட மத்தியக் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், அதை விரைந்து அமலாக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.

மத்தியக் கல்வித்துறை மற்றும் திறன் வளர்ப்புத்துறை அமைச்சர்கள் டெல்லியில் இன்று கூட்டாகச் சந்தித்துப் பேசினர். இந்தச் சந்திப்பில், கல்வித்துறை இணை அமைச்சர்கள் அன்னபூர்ணா தேவி, சுபாஸ் சர்க்கார் மற்றும் ராஜ்குமார் ரஞ்சன் சிங் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

இந்நிலையில் சந்திப்பு குறித்து மத்தியக் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ''அமைச்சரவை சகாக்களுடன் இணைந்து புதிய கல்விக் கொள்கை அமலாக்கப் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. விரைந்து பணிகளை முடிக்கவும், கல்விக் கொள்கை குறித்த விழிப்புணர்வை அதிகப்படுத்தவும் வலுவான திறன்- கல்வி ஒருங்கிணைப்பை உருவாக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

புதிய கல்விக் கொள்கை என்பது ஒரு ஆவணம் மட்டுமல்ல, நமக்கு வழிகாட்டும் தத்துவமாகும். கல்வியின் முழு அம்சங்களையும் உள்ளடக்கிய எதிர்காலத்துக்கான பார்வையுடன், வருங்காலத் தலைமுறை முழுமையான வளர்ச்சியை எட்ட இந்த கல்விக் கொள்கை உதவும்'' என்று தெரிவித்துள்ளார்.

மத்திய அரசின் சார்பில் 2019-ல் கஸ்தூரி ரங்கன் கல்விக் குழு தாக்கல் செய்த கல்விக் கொள்கையை அடிப்படையாக வைத்து 2020-ல் புதிய கல்விக் கொள்கை உருவாக்கப்பட்டது. இதற்கு மத்திய அமைச்சரவை, கடந்த ஆண்டு ஜூலை 29-ம் தேதி அன்று ஒப்புதல் அளித்தது.

5, 8-ம் வகுப்பு மாணவர்களுக்குப் பொதுத் தேர்வு, 10+2 என்ற பள்ளிப் பாடமுறை மாற்றப்பட்டு, 5+3+3+4 என்ற அடிப்படையில் 3 முதல் 8 வயது, 8 முதல் 11 வயது, 11 முதல் 14 வயது, 14-18 வயது ஆகிய மாணவர்களுக்காகப் பாடமுறை மாற்றப்படும், மாணவர்களுக்குக் குறைந்தபட்சம் 5-ம் வகுப்பு வரையில், தாய்மொழி, உள்ளூர் மொழி, பிராந்திய மொழி, பயிற்று மொழியாக இருக்க வேண்டும், பல்கலைக்கழகங்கள் மற்றும் உயர்கல்வி பயில விரும்பும் மாணவர்களுக்குப் பொதுவான நுழைவுத் தேர்வு நடத்தப்படும், மாணவர்களின் பள்ளிப் பாடங்கள் அளவு குறைக்கப்படும். 6-ம் வகுப்பிலிருந்து மாணவர்கள் தொழிற்கல்வி கற்க ஊக்கப்படுத்தப்படுவார்கள் என்பன உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இதில் கூறப்பட்டுள்ளன.

புதிய கல்விக் கொள்கை நாடு முழுவதும் படிப்படியாகக் கல்வி நிறுவனங்களில் அமல்படுத்தப்பட்டு வருகிறது. இதற்கிடையே கரோனா காரணமாக இந்தப் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x