Last Updated : 16 Jul, 2021 07:32 PM

 

Published : 16 Jul 2021 07:32 PM
Last Updated : 16 Jul 2021 07:32 PM

திட்டமிட்டபடி ஆன்லைனில் கல்லூரித் தேர்வுகள்: புதுச்சேரி மத்தியப் பல்கலைக்கழகம் அறிவிப்பு

கல்லூரித் தேர்வுகள் ஆன்லைனில்தான் நடத்தப்படும் என்றும், திட்டமிட்டபடி வரும் 19-ம் தேதி தொடங்கும் என்றும் புதுச்சேரி மத்தியப் பல்கலைக்கழகம் உறுதி செய்துள்ளது.

புதுச்சேரியில் கல்லூரித் தேர்வுகள் தொடர்பாக தெளிவான நடைமுறை வெளியிடப்படாமல் இருந்தது. இதைத் தொடர்ந்து மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் ஆன்லைனில் தேர்வு நடத்துமாறு பல்கலைக்கழகத்துக்கு, கல்வியமைச்சர் நமச்சிவாயம் கடிதம் எழுதியுள்ளதாகத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் இன்று பல்கலைக்கழகத் தேர்வுக் கட்டுப்பாட்டாளர் லாசர், அனைத்துக் கல்லூரிகளுக்கும் அனுப்பியுள்ள உத்தரவில், ''வரும் திங்கள் முதல் (ஜூலை 19) திட்டமிடப்படி அனைத்து தியரி தேர்வுகளும் ஆன்லைன் மூலம் நடத்தப்படும். இருப்பினும் இளநிலை, முதுநிலை மருத்துவம், பல் மருத்துவப் படிப்புகள் மற்றும் திட்டமிடப்படாத தேர்வுகளுக்கு இந்த அறிவிப்பு பொருந்தாது. செய்முறைத் தேர்வுகளுக்கு வாய்ப்பு இருந்தால் நேரடியாக நடத்தலாம்.

கல்லூரி முதல்வர்கள் வினாத்தாள்களை மின்னஞ்சல் மூலம் அனுப்புவார்கள். மாணவர்கள் ஏ4 வெள்ளைக் காகிதத்தில் கருப்பு மை கொண்டு எழுதலாம். 3 மணி நேர காலத்திற்குப் பிறகு மாணவர்கள், அவர்கள் எழுதிய விடைத்தாளை ஸ்கேன் செய்து கல்லூரி முதல்வருக்கு 30 நிமிடங்களுக்குள் அனுப்ப வேண்டும்.

கல்லூரி முதல்வர்கள் விடைத்தாள்களை நகலெடுத்து முதல் பக்கத்தில் கல்லூரி முத்திரையை இட்டு அதே நாளில் பல்கலைக்கழகத்துக்கு அனுப்பிவைக்க வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x