Last Updated : 14 Jul, 2021 06:27 PM

 

Published : 14 Jul 2021 06:27 PM
Last Updated : 14 Jul 2021 06:27 PM

கிருமிநாசினி தெளித்து திறப்புக்குத் தயாராகும் புதுச்சேரி பள்ளி, கல்லூரிகள்

கரோனா இரண்டாவது அலைக்குப் பிறகு கிருமிநாசினி தெளித்து, திறப்புக்காகப் புதுச்சேரி பள்ளிகள், கல்லூரிகள் தயாராகத் தொடங்கியுள்ளன.

புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி அண்மையில், 9, 10, 11,12-ம் வகுப்புகள் நடத்த, 16-ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என அறிவித்திருந்தார். அதேபோல் கல்லூரிகளும் திறக்கப்படும் என்று குறிப்பிட்டிருந்தார். முதல்வர் உத்தரவின்படி அனைத்துப் பள்ளிகளும் தயார்படுத்தப்பட்டு வருகின்றன.

கரோனா இரண்டாவது அலைக்குப் பிறகு பள்ளிகள் திறக்கப்படுவதால், அதற்கான நடைமுறைகளை கல்வித்துறை மூலம் கலந்து ஆலோசித்து வெளியிடுவோம் என்று அமைச்சர் நமச்சிவாயமும் தெரிவித்திருந்தார். இந்நிலையில் ஆசிரியர்கள் பள்ளிகளுக்கு வருகை தந்து, மாணவர்களுக்கான வகுப்பறையைத் தயார் செய்து வருகின்றனர்.

குறிப்பாக புதுச்சேரி லபோர்த்தே வீதியில் உள்ள திருவள்ளுவர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பள்ளி வகுப்பறைகள் முழுவதும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு வருகின்றது. மேலும் மாணவர்களை சமூக இடைவெளி விட்டு அமர வைக்கவும் மேசைகள் தயார்படுத்தப்பட்டு வருகின்றன.

நாளை மறுநாள் பள்ளிகள் திறக்கப்படும் நிலையில் அனைத்துப் பள்ளிகளும் முழுவீச்சில் தயாராகி வருகின்றன. அதேபோல் கல்லூரிகளிலும் பணிகள் நடக்கத் தொடங்கியுள்ளன.

புதுச்சேரி கல்வித்துறை தரப்பில் பள்ளிகள் திறப்புக்கான வழிகாட்டு நெறிமுறைகள் விரைவில் வெளியாகும் என்று பள்ளிகள் காத்திருக்கும் நிலையில், கல்வித்துறை பள்ளிகளுக்கு இதுவரை எந்த உத்தரவையும் அனுப்பவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x