Published : 14 Jul 2021 01:10 PM
Last Updated : 14 Jul 2021 01:10 PM

2021 நீட் தேர்வு முறையில் முக்கிய மாற்றம்: என்டிஏ அறிவிப்பு

2021-ம் ஆண்டுக்கான இளங்கலை நீட் தேர்வு முறையில் முக்கிய மாற்றங்களை அறிமுகப்படுத்தி உள்ளதாக, தேர்வை நடத்தும் தேசியத் தேர்வுகள் முகமை (என்டிஏ) தெரிவித்துள்ளது.

இந்த ஆண்டுக்கான நீட் தேர்வு செப்டம்பர் 12ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு விண்ணப்பிக்கும் பணி நேற்று (ஜூலை 13) தொடங்கி, நடைபெற்று வருகிறது. வழக்கமாக நீட் தேர்வு வினாத்தாளில், 180 கேள்விகள் இடம்பெறும். ஒவ்வொரு கேள்விக்கும் தலா 4 மதிப்பெண்கள் வீதம், 720 மதிப்பெண்கள் வழங்கப்படும்.

இந்நிலையில் நீட் வினாத்தாள் முறையில் மாற்றம் செய்யப்படுவதாக தேசியத் தேர்வுகள் முகமை அறிவித்துள்ளது. அதன்படி நீட் தேர்வில் 4 பாடங்களுக்கும் (கணிதம், இயற்பியல், வேதியியல், உயிரியல்) பாடவாரியாக ஏ பிரிவில் 35 கேள்விகளும், பி பிரிவில் 15 கேள்விகளும் இடம்பெறும். நான்கு பாடங்களுக்குத் தலா 50 கேள்விகள் வீதம், மொத்தம் 200 கேள்விகள் இடம்பெற உள்ளன. இதில் முதன்முறையாக, சாய்ஸ் முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இதன்படி, ஒவ்வொரு பாடத்திலும், ஏ பிரிவில் அனைத்துக் கேள்விகளுக்கும் (35), பி பிரிவில் 10 கேள்விகளுக்கு மட்டும் பதில் அளித்தால் போதும். அதாவது, இயற்பியல், வேதியியல், தாவரவியல் மற்றும் விலங்கியல் என ஒவ்வொரு பாடத்திலும், ஏ பிரிவில் உள்ள 35 கேள்விகளுக்கும் விடை அளிக்க வேண்டும். பி பிரிவில் உள்ள 15 கேள்விகளில் ஏதேனும் பத்துக் கேள்விகளுக்கு மாணவர்கள் விடை அளித்தால் போதும்.

குறிப்பாக பி பிரிவில் கேட்கப்பட்டுள்ள 15 கேள்விகளில், நன்றாக விடை தெரிந்த 10 கேள்விகளுக்கு மட்டும் பதில் அளித்தால் போதும் என என்டிஏ தெரிவித்துள்ளது.

எனினும் இவற்றில் ஏதேனும் ஒரு கேள்விக்குத் தவறான விடையைத் தேர்வு செய்தால், அது மைனஸ் மதிப்பெண்ணாகக் கருதப்பட்டு, ஒரு மதிப்பெண் கழிக்கப்படும். அதேபோல பதில் அளிக்காவிட்டால், அதற்கு நெகட்டிவ் மதிப்பெண் அளிக்கப்படாது என்னும் நடைமுறை அப்படியே தொடர்கிறது.

அதேபோல இளங்கலை நீட் நுழைவுத் தேர்வு இந்த ஆண்டு முதல் முறையாக 13 மொழிகளில் நடத்தப்பட உள்ளது. மலையாளம், பஞ்சாபி ஆகிய மொழிகள் கூடுதலாகச் சேர்க்கப்பட்டுள்ளன. அத்துடன் நீட் தேர்வு எழுதுவோர் வசதிக்காக மத்தியக் கிழக்கு நாடுகளில் வசிக்கும் இந்திய மாணவர்களுக்காகக் குவைத்தில் இந்த ஆண்டு புதிய தேர்வு மையம் திறக்கப்பட்டுள்ளது.

கரோனா வைரஸ் பரவலால் மாணவர்களின் நலன் கருதி நீட் தேர்வு நடக்கும் நகரங்கள் எண்ணிக்கை 155-ல் இருந்து 198 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. தேர்வு மையங்கள் எண்ணிக்கையும் உயர்த்தப்பட உள்ளன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x