Last Updated : 14 Jul, 2021 03:14 AM

 

Published : 14 Jul 2021 03:14 AM
Last Updated : 14 Jul 2021 03:14 AM

புதுக்கோட்டை மாவட்டத்தில் அதிகபட்சமாக 717 மாணவர்கள் பயிலும் அரசு நடுநிலைப் பள்ளி: நிகழாண்டில் 232 பேர் புதிதாக சேர்ந்தனர்

புதுக்கோட்டை

புதுக்கோட்டை மாவட்டத்தில் அதிகபட்சமாக 717 மாணவர்களைக் கொண்ட ஒரே அரசு நடுநிலைப் பள்ளியாக புதுக்கோட்டை அரசு உயர் தொடக்கப் பள்ளி (நடுநிலைப்பள்ளி) திகழ்கிறது.

புதுக்கோட்டை வடக்கு ராஜ வீதியில், நகர்மன்றம் அருகே உள்ள அரசு உயர் தொடக்கப் பள்ளியானது (நடுநிலைப் பள்ளி) மிகவும் பழமையான பள்ளிகளில் ஒன்றாக உள்ளது. இந்தப் பள்ளியில் 1, 2-ம் வகுப்புகளுக்கு ஏ.சி வசதியுடன்கூடிய நவீன தொழில் நுட்பங்களைக் கொண்டு கற்பிக்கப்படுகிறது. இதுதவிர, ஸ்மார்ட் கிளாஸ்களும் உள்ளன. மேலும், பள்ளி வளாகத்தில் சிசிடிவி கண்காணிப்பு கேமராக்களும் பொருத்தப்பட்டுள்ளன. இங்கு பள்ளித் தலைமை ஆசிரியர் என்.சிவசக்திவேல் உட்பட 9 ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர்.

இப்பள்ளித் தலைமை ஆசிரியர் உட்பட 50-க்கும் மேற்பட்ட அரசு ஊழியர்களின் பிள்ளைகள் இதே பள்ளியில் பயில்கின்றனர். நிகழ் கல்வி ஆண்டில் நேற்று வரை 232 பேர் புதிதாக சேர்ந்துள்ளனர். இதன் மூலம் மொத்த மாணவர்களின் எண்ணிக்கை 717 ஆக உயர்ந்துள்ளது.

இது குறித்து பள்ளியின் தலைமை ஆசிரியர் சிவசக்திவேல் கூறியது: இந்தப் பள்ளியில் நவீன தொழில்நுட்பங்களைக் கொண்டு கற்பிக்கப்படுவதோடு, அவ்வப்போது விழாக்களின் மூலம் மாணவர்களின் திறமைகள் அங்கீகரிக்கப்பட்டு வருகின்றன.

இப்பள்ளியில் கடந்த 2018-19 கல்வி ஆண்டில் 112 பேரும், 2019-20-ல் 180 பேரும், கடந்த கல்வி ஆண்டில் 213 பேரும் புதிதாக சேர்ந்தனர். நிகழ் கல்வி ஆண்டில் இதுவரை 232 பேர் சேர்ந்துள்ளனர். இங்கு, 11 கூடுதல் வகுப்பறைகளை அமைத்து, இடைநிலை ஆசிரியர்கள் 9 பேர், பட்டதாரி ஆசிரியர்கள் 3 பேர் கூடுதலாக பணிநியமனம் செய்ய வேண்டும். மேலும், கழிப்பறைகளின் எண்ணிக்கையையும் அதிகரிக்க வேண்டும். இதோடு, சிறப்பு ஆசிரியர்கள், ஆசிரியரல்லாத பணியாளர்களை நியமிக்க வேண்டும். இவற்றை செய்துகொடுத்தால் மாணவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்றார்.

புதுக்கோட்டை மாவட்டத்திலேயே அரசு நடுநிலைப்பள்ளிகளில் அதிக மாணவர்களை கொண்ட பள்ளியாக இப்பள்ளி உள்ளது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x