Published : 13 Jul 2021 12:50 PM
Last Updated : 13 Jul 2021 12:50 PM

தமிழகத்திலும் ஜூலை 16-ல் பள்ளிகள் திறப்பா?- அமைச்சர் அன்பில் மகேஸ் தகவல்

புதுச்சேரியைப் போல் தமிழகத்தில் பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் கரோனா தொற்றால் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. தற்போது கரோனா தொற்று பாதிப்பு குறைந்துள்ளது. தடுப்பூசி போடும் பணியும் மும்முரமாக நடைபெறுகிறது. புதுச்சேரியில் முதல் கட்டமாக, மருத்துவக் கல்லூரி மாணவர்களுக்குத் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. விரைவில் மருத்துவக் கல்லூரிகளும் திறக்கப்பட உள்ளன.

இதற்கிடையே புதுச்சேரியில் வரும் 16-ம் தேதியில் இருந்து 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்புகள் வரை பள்ளிகள் திறக்கப்படும் என்றும் அதேபோல் அனைத்துக் கல்லூரிகளும் திறக்கப்படும் எனவும் முதல்வர் ரங்கசாமி அண்மையில் அறிவித்தார்.

இந்நிலையில் தமிழகத்தில் பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என்று கேள்வி எழுந்துள்ளது. இதுகுறித்து இன்று திருச்சி மாவட்டம், திருவெறும்பூரில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி செய்தியாளர்களிடம் கூறும்போது, "புதுச்சேரியில் 9 முதல் 12ஆம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியைப் போலவே தமிழகத்திலும் பள்ளிகள் திறப்பது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது.

இதுகுறித்து நேற்று அதிகாரிகள் மட்டத்தில் ஆலோசனை நடத்தினோம். நாமும் ஏன் பள்ளிகளைத் திறக்கக் கூடாது என்ற வகையில்தான் ஆலோசனை இருந்தது. புதுச்சேரி என்ன முடிவு எடுத்திருக்கிறதோ அதை அடிப்படையாகக் கொண்டு, துறை சார்ந்த அதிகாரிகளின் ஆலோசனைகளை முதல்வரின் பார்வைக்கு எடுத்துச் செல்வோம். இன்றைய கரோனா சூழலைப் பொறுத்து முதல்வர் என்ன வழி வகைகளைத் தெரிவிக்கிறாரோ, அவற்றைப் பின்பற்றுவோம்" என்று அமைச்சர் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x