Published : 13 Jul 2021 03:13 AM
Last Updated : 13 Jul 2021 03:13 AM
தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் கரோனா காலத்தில் பள்ளி மாணவர்களின் மனநிலை குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. கரோனா ஊரடங்கு காலத்தில் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பள்ளிகள் திறக்கப்படாத நிலையில், சில பள்ளிகளில் ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் மாணவர்களின் கல்விமுறை, பொது அறிவு, தற்போதைய மனநிலை மற்றும் கல்வி கற்பதற்கான புதிய சூழலைஎதிர்கொள்வதில் உள்ள பிரச்சினைகள் ஆகியவை குறித்து தமிழ்நாடு முழுவதும் கடந்த 4 நாட்களாக தமிழ்நாடு அறிவியல் இயக்கம் கள ஆய்வு நடத்தி வருகிறது.
அதன்படி திருச்சி மாவட்டத்தில் வையம்பட்டி, நடுப்பட்டி,பொய்யாமணி, உய்யக்கொண்டான் திருமலை மற்றும் கருமண்டபம் ஆகிய இடங்களில் மாணவர்கள் மற்றும் பெற்றோரிடம் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாவட்ட துணைத் தலைவர் ஆர்.சீத்தா தலைமையில் பிரபா, சுகனி, அட்சயா, கோகுல், பூவிழி தென்றல்ஆகியோரைக் கொண்ட குழுவினர் கள ஆய்வு மேற்கொண்டனர்.
இதுகுறித்து தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாவட்டச் செயலர் எம்.மணிகண்டன் கூறியது:
இந்த ஆய்வில் பெரும்பாலான மாணவர்கள் பள்ளிகள் திறக்கப்பட வேண்டும் என்பதில் ஆர்வமாக இருப்பதும், குழந்தைத் தொழிலாளர்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதும் தெரியவந்துள்ளது. இந்த ஆய்வின் முடிவுகள் மாநில கல்விவளர்ச்சி நாளான ஜூலை 15-ம்தேதி தமிழக அரசிடம் சமர்ப்பிக்கப்படும் என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT