Last Updated : 07 Jul, 2021 05:31 PM

 

Published : 07 Jul 2021 05:31 PM
Last Updated : 07 Jul 2021 05:31 PM

தேனியில் அரசுப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரிப்பு: வகுப்பறைகளுக்கு பற்றாக்குறை

சில்வார்பட்டி அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளிக்கு கூடுதல் வகுப்பறை கேட்டு பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் சரவணக்குமாரிடம் மனு கொடுக்கும் ஆசிரியர்கள்.

பெரியகுளம்

கரோனா ஊரடங்கினால் பெற்றோர் மனோநிலையில் பெரும் மாற்றம் ஏற்பட்டுள்ளது. இதுவரை தனியார்பள்ளி மீது கொண்டிருந்த அதீத ஆர்வம் தற்போது வெகுவாக மாறியுள்ளது. பலரும் தங்கள் குழந்தைகளை தனியார் பள்ளிகளில் இருந்து அரசு பள்ளிகளில் சேர்க்கத் தொடங்கி உள்ளனர்.

ஊரடங்கினால் ஏற்பட்ட பொருளாதார பாதிப்பு, தனியார் பள்ளிகளின் கட்டணத்தை செலுத்துவதில் சிரமம், இரண்டு ஆண்டுகளாக வகுப்பறைகற்றல் இல்லாமல் செலுத்தப்பட்ட கட்டணம், அரசு பள்ளி மாணவர்களுக்கு கிடைக்கும் சலுகைகள் போன்றவை இதற்கு முக்கிய காரணங்களாக உள்ளன.

தேனி மாவட்டத்தைப் பொறுத்தளவில் 70 அரசு மேல்நிலைப்பள்ளி, 36உயர்நிலைப்பள்ளிகள் உள்ளன. இதில் பெரும்பாலான பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை வெகுவாய் உயர்ந்துள்ளது.

பெரியகுளம் அருகே சில்வார்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் 2015-16-ம் கல்வியாண்டில் 423 மாணவர்கள் பயின்று வந்தனர். இந்த கல்வியாண்டில் 2ஆயிரமாக உயர்ந்துள்ளது. 1:40 என்ற ஆசிரியர் மாணவர் விகிதத்தை கடந்துள்ளதால் வகுப்பறை பற்றாக்குறை ஏற்பட்டு மாணவர் சேர்க்கை நிறுத்தப்பட்டுள்ளது.

மாணவர் சேர்க்கை முடிந்துவிட்டதாக அறிவிப்பு வெளியிட்டுள்ள சில்வார்பட்டி அரசு மாதிரிமேல்நிலைப்பள்ளி

அந்தளவிற்கு இப்பகுதி மக்கள் இந்த அரசுப் பள்ளி மீது நம்பிக்கை வைத்துள்ளனர்.

இதே போல் அல்லிநகரம், ஆண்டிபட்டி, உத்தமபாளையம் உள்ளிட்ட பல்வேறு அரசு மேல்நிலைப்பள்ளிகளிலும் கடந்த ஆண்டுகளை விட மாணவர் சேர்க்கை வெகுவாய் உயர்ந்துள்ளது.

இது குறித்து சில்வார்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் மோகன் கூறுகையில், அரசு பள்ளிகளில் மடிக்கணினி, மிதிவண்டி, பாடப்புத்தகம், அட்லஸ் உள்ளிட்ட 14வகை நலத்திட்ட உதவிகள் அளிக்கப்படுகின்றன. கல்விக்கட்டணமும் இல்லை. மேலும் அரசுப் பள்ளியில் கல்வி பயின்றவர்களுக்கு பல்வேறு சலுகைகளும் வழங்கப்படுகின்றன. இது பெற்றோர் மத்தியில் மாற்றத்தை ஏற்படுத்தி உளளது என்றார்.

இதை உணர்ந்த சில தனியார் பள்ளிகள் மாணவர்களின் மாற்றுச் சான்றிதழை வழங்காமல் இழுத்தடித்து வருகின்றன. இருப்பினும் மாணவர்களின் பிறப்புச்சான்று, ஆதார்அட்டை போன்றவற்றை வைத்து தனியார் பள்ளிகளில் இருந்து வரும் மாணவர்கள் அரசுப் பள்ளிகளில் சேர்க்கப்பட்டு வருகின்றனர்.

வழக்கத்தை விட கூடுதல் சேர்க்கை நடைபெறுவதால் சில அரசுப் பள்ளிகளில் வகுப்பறை பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. எனவே கூடுதல் வகுப்பறை கேட்டு கல்வித்துறை அதிகாரிகள், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

சில்வார்பட்டி அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியைப் பொறுத்தளவில் தற்போதைய சூழலில் கூடுதலாக 24வகுப்பறைகள் தேவைப்படும் நிலைக்கு மாணவர்களின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது. எனவே பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் சரவணக்குமாரிடம் தலைமையாசிரியர் மோகன் தலைமையில் இது குறித்த கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

உடன் உதவித் தலைமையாசிரியர் வெள்ளையன், ஆசிரியர்கள் வெங்கடேசன், செந்தில்குமார், பாலமுரளி ஆகியோர் இருந்தனர்.

கடந்த ஆண்டுகளை விட அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்து வருவதால் ஆசிரியர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x