Last Updated : 06 Jul, 2021 05:46 PM

 

Published : 06 Jul 2021 05:46 PM
Last Updated : 06 Jul 2021 05:46 PM

புதுவை அரசுப் பள்ளிகளில் ஜூலை 12 முதல் பிளஸ் 1 தரவரிசைப் பட்டியல்: 14-ம் தேதி நேர்காணல்

புதுச்சேரி

புதுச்சேரி அரசுப் பள்ளிகளில் பிளஸ் 1 மாணவர் சேர்க்கைக்கு ஜூலை 12-ம் தேதி அன்று தரவரிசைப் பட்டியல் வெளியாகி, 14-ம் தேதி நேர்காணல் தொடங்குகிறது.

கரோனா பரவல் காரணமாக 10-ம் வகுப்புப் பொதுத் தேர்வு நடக்காததால் அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக அரசு அறிவித்துள்ளது. மேலும், மாணவர்கள் 9-ம் வகுப்பில் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் பிளஸ் 1 மாணவர் சேர்க்கை நடத்த முடிவு செய்யப்பட்டு அறிவிப்பும் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கான விண்ணப்பங்கள் புதுச்சேரி அரசுப் பள்ளிகளில் கடந்த மாதம் 23-ம் தேதி முதல் விநியோகம் செய்யப்பட்டன.

கரோனாவால் வாழ்வாதாரத்தை இழந்த பெற்றோர்கள், தனியார் பள்ளிகளில் பயிலும் தங்கள் குழந்தைகளை அரசுப் பள்ளிகளுக்கு மாற்ற ஆர்வம் காட்டியுள்ளனர். எனவே, விண்ணப்பங்கள் விநியோகிக்கத் தொடங்கிய நாள் முதல் அரசுப் பள்ளிகளில் சேர மாணவர்கள் குவிந்து வருகின்றனர். வழக்கத்தை விட அதிகமாக மாணவர்கள் விண்ணப்பங்களை வாங்கிச் சென்றுள்ளனர். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கும் பணி நிறைவடைந்துள்ளது.

இதுபற்றிக் கல்வித்துறை தரப்பில் விசாரித்தபோது, "புதுச்சேரி அரசுப் பள்ளிகளில் வந்த விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு வருகிற 12-ம் தேதி அரசுப் பள்ளி மாணவர்களுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டு 14-ம் தேதி பிளஸ் 1 மாணவர் சேர்க்கைக்கான நேர்காணல் நடத்தப்பட உள்ளது.

இதுபோல் வருகிற 19-ம் தேதி அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டு 21-ம் தேதி நேர்காணல் நடத்தப்படும். 22-ம் தேதி தனியார் பள்ளிகளில் இருந்து அரசுப் பள்ளியில் சேர விண்ணப்பித்த மாணவர்களுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டு 23-ம் தேதி மாணவர் சேர்க்கை நடக்கிறது" என்று தெரிவித்தனர்.

புதுவையில் உள்ள அரசுப் பள்ளிகளில் பிளஸ் 1 வகுப்பில் அறிவியல் பாடப் பிரிவில் 4,045 இடங்களும், கலை பாடப்பிரிவில் 2,305 இடங்களும், தொழில்நுட்பப் பிரிவில் 565 இடங்களும் என மொத்தம் 6,915 இடங்கள் உள்ளன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x