Last Updated : 06 Jul, 2021 03:12 AM

 

Published : 06 Jul 2021 03:12 AM
Last Updated : 06 Jul 2021 03:12 AM

பொறியியல் கல்வியுடன் ஒப்பிடும்போது பாலிடெக்னிக் டிப்ளமோ படிப்புகளில் அதிக வேலைவாய்ப்புகள்: பேராசிரியர்கள், கல்வியாளர்கள் தகவல்

பொறியியல் கல்வியுடன் ஒப்பிடும்போது பாலிடெக்னிக் டிப்ளமோ முடித்தவர்களுக்கு அதிக வேலைவாய்ப்பு உள்ளதாக ஆசிரியர்கள், கல்வியாளர்கள் தெரிவித்தனர்.

தமிழகத்தில் உயர்கல்வித் துறையின்கீழ் 550-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள்இயங்குகின்றன. இவற்றில் 4 லட்சம் மாணவர்கள் படித்து வருகின்றனர். ஆண்டுதோறும் பொறியியல் பட்டப்படிப்பை முடித்து சுமார்1 லட்சம் மாணவர்கள் வெளியேறுகின்றனர். ஆனால், அவர்களில் 40 சதவீதம் பேருக்குமட்டுமே வேலைவாய்ப்புகள் கிடைக்கின்றன.

அதேநேரம் பாலிடெக்னிக் கல்லூரிகளில் டிப்ளமோ முடிக்கும் மாணவர்களில் வேலைவாய்ப்பு பெறுபவர்களின் எண்ணிக்கை 70 சதவீதமாக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதற்கான காரணங்கள் குறித்து சென்னைஅரசு மகளிர் பாலிடெக்னிக் கல்லூரி துறைத் தலைவர் கே.முத்துக்குமார் கூறியதாவது:

தற்போதைய சூழலில் குறைந்த அளவிலான ஊதியத்தில் அதிக அளவில் பணியாளர்களை வேலைக்கு தேர்வு செய்வதையே தொழில் நிறுவனங்கள் விரும்புகின்றன.அதேநேரம் லட்சக்கணக்கான ரூபாய் செலவழித்து பொறியியல் முடித்த பட்டதாரிகள் குறைந்தஊதியத்தில் பணிக்குச் செல்ல தயங்குகின்றனர். ஆனால், டிப்ளமோ முடித்த மாணவர்களுக்கு மாதம் ரூ.15,000 ஊதியம் என்பதுபெரிய மதிப்பீடாகும். ஏனெனில், பொறியியல்கல்வியைவிட மிகவும் குறைவாகவே டிப்ளமோ படிப்புகளுக்கு செலவாகும்.

இதுதவிர பாலிடெக்னிக் பாடத்திட்டத்தில்செய்முறை பாடங்களுக்கு அதிக முக்கியத்துவம் தரப்படும். இதனால் துறைசார்ந்த அடிப்படை தொழில்நுட்பங்களில் டிப்ளமோ மாணவர்கள் திறன் பெற்றவர்களாக உள்ளனர்.மேலும், டிப்ளமோ முடித்தவர் ஒரு நிறுவனத்தில் பணியில் சேர்ந்தால் ஊக்கத்தொகையுடன் பகுதிநேரமாக உயர்கல்வி படிக்கலாம். இதனால் குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் வரைஅந்நிறுவனத்தில் ஊழியர்கள் பணிபுரிவது உறுதி செய்யப்படும். அந்த வகையில் டிப்ளமோ மாணவர்களை ஒப்பிடும்போது ஒரு நிறுவனத்தில் ஓராண்டுக்கு மேல் பணியில் நீடிக்கும் பொறியியல் பட்டதாரிகளின் எண்ணிக்கை குறைவாக உள்ளது.

அதனுடன், டிப்ளமோ முடித்தவர்களுக்கு ஏற்கெனவே துறைசார்ந்த அடிப்படை புரிதல் இருப்பதால் குறுகிய பயிற்சி அளித்து அவர்களை விரைவில் பணிகளில் அமர்த்தி விடலாம். இதனால், சமீபகாலமாக பெரிய அளவிலான நிறுவனங்களைத் தவிரமற்ற நிறுவனங்களின் வேலை வாய்ப்புகளில் டிப்ளமோ முடித்தவர்களுக்கு கூடுதல் முன்னுரிமை தருகின்றனர்.

அதேபோல், பாலிடெக்னிக் கல்லூரிகளில் ஆடை வடிவமைப்பு உட்பட பல்வேறு குறுகியகால தொழிற்பயிற்சிகளும் கற்று தரப்படுகின்றன. இதன்மூலம் மாணவர்கள் சிறிய அளவில் சுயதொழில்களும் செய்ய முடியும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதுகுறித்து கல்வியாளர் ஆர்.அஸ்வின் கூறியதாவது:

நம்நாட்டில் பொறியியல் முடித்து வெளியேறும் 100 பட்டதாரிகளில் 57 பேர் மட்டுமே வேலை பெறுவதற்கு தகுதியானவர்களாக உள்ளனர். ஆனால், பாலிடெக்னிக் படிப்புகளில் செய்முறை பாடங்கள் அதிகம் இருப்பதால், சிவில், எலெக்ட்ரிக்கல், மெக்கானிக்கல் உள்ளிட்ட துறைகளில் பொறியியல் பட்டதாரிகளைவிட டிப்ளமோ மாணவர்களுக்கு நல்ல வரவேற்புள்ளது. அதேநேரம் கணினிசார்ந்த தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் பொறியியல் பட்டதாரிகளுக்குதான் முக்கியத்துவம் தரப்படுகிறது.

ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் அதிகரிப்பு

இதுதவிர குறைந்த முதலீட்டில் தொடங்கப்படும் சிறு, குறு மற்றும் ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் எண்ணிக்கையும் அதிகரித்துவிட்டன. மேலும், சிறிய நகரங்களில் பணிபுரிய பொறியியல் பட்டதாரிகளிடம் தயக்கம் நிலவுகிறது. இதனால் மேலாளர், தலைமை செயல்அதிகாரி உள்ளிட்ட முக்கிய பொறுப்புகள் தவிர்த்து இதர பணிகளுக்கு டிப்ளமோ பட்டதாரிகளையே நிறுவனங்கள் தேர்வு செய் கின்றன. இவ்வாறு அவர் கூறினார்.

இதற்கிடையே உயர்கல்வி, பள்ளிக்கல்வி மாணவர் சேர்க்கையில் தேசிய அளவில் தமிழகம் முன்னணி வகிக்கிறது. ஆனால், வேலைக்கு செல்பவர்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பதாகவும், இதற்கு பள்ளிகளிலேயே தொழிற்கல்வியை வலுப்படுத்த வேண்டும் எனவும் கோரிக்கை எழுந்துள்ளது.

இதுகுறித்து பள்ளிக்கல்வி அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழிக்கு, முன்னாள் துணைவேந்தர் இ.பாலகுருசாமி அனுப்பிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:

தமிழகத்தில் 10 சதவீதம் இளைஞர்களே தொழிற்கல்வி பயில்கின்றனர். ஆனால், கொரியாவில் 96 சதவீதம், ஜப்பானில் 80சதவீதம், ஜெர்மனியில் 75 சதவீதம், பிரிட்டனில் 68 சதவீதம் பேர் தொழிற்கல்வி பெறுகின்றனர். இதனால் அந்த நாடுகள் பொருளாதாரத்தில் மிகவும் சிறந்த நிலையைஎட்டியுள்ளன. தமிழகம் வளர்ச்சி பெற்ற தொழில்கள் நிறைந்த மாநிலமாகும். நமக்குஅதிகளவில் பணியாளர்கள் தேவைப்படுகின்றனர். வேலைவாய்ப்பு சந்தையின் தேவையை ஈடுசெய்யும் வகையில் பள்ளிகளில் தொழிற்கல்வி பயில்வதை தமிழக அரசு உறுதிசெய்ய வேண்டும்.

அதன்படி பள்ளிகளில் 50 சதவீதம் மாணவர்கள் கட்டாயம் தொழிற்கல்வி பயிற்சி பெற வழிசெய்ய வேண்டும். தொழிற்கல்விக்கு தேவையான கட்டமைப்புகளை ஏற்படுத்தி தரமான பயிற்றுநர்களை நியமிக்க வேண்டும்.அந்தந்த ஊர்களில் உள்ள தொழில்களுடன் கூட்டு ஏற்படுத்திக் கொண்டு, மாணவர்களுக்கு உரிய பயிற்சி தர வேண்டும்.

தொழிற்கல்வியானது மாணவர்களை படைப்பாற்றல் கொண்ட திறமை வாய்ந்தவர்களாக உருவாக்கும். மேலும், நம் நாட்டின்பொருளாதார மேம்பாட்டுக்கும் வழிவகை செய்யும். எனவே, தொழிற்கல்வி முறையை பள்ளிகளில் வலுப்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x