Published : 05 Jul 2021 03:12 AM
Last Updated : 05 Jul 2021 03:12 AM
ஆன்-லைன் வகுப்புக்கு ஸ்மார்ட்போன் இல்லாமலேயே 10-ம் வகுப்பில் 98 சதவீத மதிப்பெண்களை ஜம்மு-காஷ்மீர் சிறுவன் வாங்கி சாதனை படைத்துள்ளான்.
ஜம்மு-காஷ்மீரின் உதாம்பூர் அருகிலுள்ள அம்ரோ கிராமத்தைச் சேர்ந்த சிறுவன் மன்தீப் சிங். 10-ம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் ஜம்மு-காஷ்மீரில் 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் அண்மையில் வெளியாயின. இதில் மன்தீப் சிங் 98.06 சதவீத மதிப்பெண்களைப் பெற்று மாவட்டத்திலேயே முதல் மாணவராக தேர்ச்சி பெற்றுள்ளார்.
கரோனா வைரஸ் காரணமாக பள்ளிகள் திறக்கப்படாததால் மன்தீப் சிங்கால் பள்ளிக்கு செல்ல முடியவில்லை. அதே நேரத்தில் ஆன்-லைன் வகுப்பையும் இவரால் பெற முடியவில்லை. காரணம் இவரிடம் ஸ்மார்ட்போன் வசதி இல்லாமல் போனதுதான். ஆனால் மனம் தளராமல் படித்து அதிக மதிப்பெண்களை பெற்றுள்ளார் மன்தீப் சிங்.
அவரது தந்தை ஷியாம் சிங்விவசாயி. தாய் சந்தியா தேவிஇல்லத்தரசி. அதிக மதிப்பெண்கள் பெற்றது குறித்து மன்தீப் சிங் கூறும்போது, “ஆன்-லைன் வகுப்புக்குச் செல்ல முடியவில்லை என்பது கடினமாக இருந்தது. இருந்தாலும் தொடர்ந்து கவனமாக படித்தேன். படிப்பு நேரம் போக, பெற்றோருக்கு உதவியாக வயலில் வேலை செய்வேன். நான் இந்தஅளவுக்கு அதிக மதிப்பெண்கள் பெற்றதற்கு எனது ஆசிரியர்கள்தான் காரணம். நான் படிக்க புத்தகங்கள் கொடுத்து உதவினார்கள். அவர்களுக்கு எனது நன்றி.
நான் 12-ம் வகுப்பு முடித்ததும் நீட் தேர்வு எழுதுவேன். அதில் வெற்றி பெற்று டாக்டராவதே லட்சியம். பொது முடக்கம் காரணமாக எங்களது வாழ்க்கை பாதிக்கப்பட்டாலும் படிக்க வேண்டும் என்ற லட்சியத்தை மட்டும் நான் விடவே இல்லை’’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT