Last Updated : 05 Jul, 2021 03:12 AM

 

Published : 05 Jul 2021 03:12 AM
Last Updated : 05 Jul 2021 03:12 AM

அரசின் இலவச பயிற்சி வகுப்புகள் நிறுத்தப்பட்டதால் நீட் தேர்வில் அரசுப் பள்ளி மாணவர்கள் தேர்ச்சி சரியும்: ஆசிரியர்கள், பெற்றோர் குற்றச்சாட்டு

சென்னை

தமிழக அரசின் இலவச பயிற்சிவகுப்புகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால், நீட் தேர்வில் அரசுப்பள்ளி மாணவர்களின் தேர்ச்சி பாதிக்கப்படும் என்று ஆசிரியர்களும் பெற்றோரும் குற்றம்சாட்டியுள்ளனர்.

இளநிலை மருத்துவப் படிப்புகளில் சேர நீட் தேர்வில் தேர்ச்சிப் பெற வேண்டும். தமிழகத்தில் நீட் தேர்வு நடைமுறை 2017-ம் ஆண்டு முதல் அமலில் உள்ளது. எனினும், நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று மருத்துவப் படிப்புகளில் சேரும் அரசுப்பள்ளி மாணவர்கள் எண்ணிக்கை குறைவாகவே இருந்தது.

இதையடுத்து மருத்துவப் படிப்புகளில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத உள்ஒதுக்கீடு வழங்கி கடந்த ஆண்டு தமிழக அரசு உத்தரவிட்டது. இதனால் சுமார் 400 மாணவர்கள் வரை பயனடைந்தனர். இதுதவிர அரசுப்பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் நீட் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற ஏதுவாக 2018-ம் ஆண்டு முதல் பள்ளிக்கல்வித் துறை சார்பில் இலவச பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் தமிழகத்தில் ஆட்சிப் பொறுப்பேற்ற திமுக, நீட் தேர்வை ரத்து செய்வதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இதற்காக வழிமுறைகளை ஆய்வுசெய்ய ஒய்வுபெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் ஒருகுழுவை தமிழக அரசு அமைத்துள்ளது. அதேநேரம் நீட் பயிற்சி வகுப்புகள் தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால் மாணவர்களின் தேர்ச்சி பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து அரசுப் பள்ளிதலைமையாசிரியர்கள் கூறியதாவது:

நடப்பாண்டு கரோனா பரவலால் நீட் பயிற்சி வகுப்புகள் இபாக்ஸ் நிறுவனம் மூலம் இணைய வழியில் கடந்த நவம்பர் 9-ம் தேதி தொடங்கப்பட்டன. முதல்கட்ட பயிற்சிகள் ஜனவரி 12-ம் தேதியுடன் முடிக்கப்பட்டன. அதன்பின் பிளஸ் 2 மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டதால் பயிற்சி வகுப்புகள்நிறுத்தப்பட்டன. பிளஸ் 2 பொதுத்தேர்வு மே மாதம் முடிந்தபின் நீட் பயிற்சி நடத்தப்படும் என்று பள்ளிக்கல்வித் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது. கரோனாவால் தேர்வுகள் ரத்து செய்யப்பட்ட பிறகு பயிற்சி வகுப்புகள் தொடங்கும் என எதிர்பார்த்தோம். ஆனால் இது தொடர்பாக எவ்வித அறிவிப்பையும் கல்வித்துறை வெளியிடவில்லை.

அரசின் கொள்கை சார்ந்த விவகாரம் என்பதால் நீட் பயிற்சியை தொடர்வதால் சிக்கல் இருப்பதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. செப்டம்பர் மாதம்நீட் தேர்வு நடத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ள நிலையில், உடனடியாக பயிற்சி வழங்காவிட்டால், நீட் தேர்வில் அரசுப்பள்ளி மாணவர்களின் தேர்ச்சி குறையும் நிலை உருவாகியுள்ளது. எனவே, மாணவர்கள் நலன்கருதி நீட் பயிற்சியை தொடர தமிழக அரசு முன்வர வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

சமூக ஆர்வலர் ஜெ.ராஜராஜன் கூறும்போது, ‘‘நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறும் தமிழக அரசின் முடிவு வரவேற்கத்தக்கது. எனினும், உச்சநீதிமன்ற தீர்ப்பு விவகாரம் என்பதால் இதில் உடனடி தீர்வை பெறமுடியாது. தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் நீட் தேர்வுக்கு பிளஸ் 1 வகுப்பு முதலே லட்சக்கணக்கில் பணம் செலவு செய்து அதற்கான மையங்களில் சேர்ந்து பயிற்சி பெறுகின்றனர். மறுபுறம் பொருளாதாரத்தில் பின்தங்கிய அரசுப்பள்ளி மாணவர்களால் தங்களை நீட் தேர்வுக்கு தயார்படுத்திக் கொள்வதில் சிக்கல் நிலவுகிறது.

இதை உணர்ந்துதான் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு இலவச பயிற்சி தர முடிவா னது. எனவே, அரசின் சட்டப் போராட்டம் ஒருபுறம் இருந்தாலும் நீட் தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதிசெய்வது மிகவும் அவசியமாகும்” என்றார்.

அதேபோல், தனியார் பயிற்சி மையங்களில் பிள்ளைகளை சேர்க்கும் அளவுக்கு பொருளாதார வசதி இல்லாததால் நீட் தேர்வுக்கு இலவச பயிற்சி வழங்க தமிழக அரசு முன்வர வேண்டுமென பெற்றோரும் கோரிக்கை வைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x