Last Updated : 03 Jul, 2021 01:46 PM

 

Published : 03 Jul 2021 01:46 PM
Last Updated : 03 Jul 2021 01:46 PM

சேர்க்கையை அதிகப்படுத்த பட்டுக்கோட்டை அரசுப் பள்ளி வித்தியாச முயற்சி: மாணவர் பெயரில் ரூ.1000 ரூபாய் வைப்புத் தொகை

தஞ்சாவூர்

பட்டுக்கோட்டை அருகே அரசு உயர்நிலைப் பள்ளியில் சேரும் மாணவர்களின் பெயர்களில் ஆயிரம் ரூபாய் வைப்புத் தொகையும், குலுக்கலில் பெற்றோருக்கு 10 ஆயிரம் ரூபாய் ஊக்கத் தொகையும் வழங்கி, மாணவர்களின் சேர்க்கையை ஆசிரியர்கள் அதிகப்படுத்தி வருகின்றனர்.

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே ஆலடிக்குமுளையில் அரசு உயர்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் பள்ளியின் வளர்ச்சிக்கும், மாணவர்கள் சேர்க்கையை அதிகரிக்கவும், முன்னாள் மாணவர்கள், தலைமை ஆசிரியருடன் இணைந்து பல்வேறு முயற்சிகளைச் செய்து வருகின்றனர். அந்த வகையில், 2021–2022 புதிய கல்வியாண்டு மாணவர்கள் சேர்க்கை தொடங்கிய நிலையில், முன்னாள் மாணவர்கள் 10 பேர் தலைமையாசிரியர் சரவணனுடன் இணைந்து, புதிதாகச் சேரும் மாணவர்களுக்குப் பரிசுகளும், சலுகைகளும் வழங்கி அரசுப் பள்ளியில் தங்களின் பிள்ளைகளைச் சேர்க்கும் பெற்றோர்களையும் ஊக்கப்படுத்த வேண்டும் என முடிவு செய்தனர்.

அதற்காக இந்தக் கல்வி ஆண்டில் சேரும் மாணவர்களின் பெயரில், அஞ்சலகத்தில் ஆயிரம் ரூபாய் டெபாசிட் செய்தும், பெற்றோர்களை ஊக்கப்படுத்தும் விதமாக குலுக்கல் முறையில் 10 ஆயிரம் ரூபாய் பரிசுத் தொகையும் வழங்குவதாக அறிவித்தனர்.

அதன்படி சேர்க்கை தொடங்கிய சில தினங்களில் 14 மாணவர்கள் பள்ளியில் சேர்ந்துள்ளனர். அவர்களின் பெயர்களில், அஞ்சலகத்தில் தொடங்கிய கணக்குப் புத்தகத்தைப் பட்டுக்கோட்டை மாவட்டக் கல்வி அலுவலர் ஜான்பாக்கியம் செல்வம், தலைமையாசிரியர் சரவணன் மற்றும் கிராம மக்கள் வழங்கி ஊக்கப்படுத்தினர்.

இதுகுறித்துத் தலைமையாசிரியர் சரவணன் கூறுகையில், ''பள்ளி வளாகத்தில் மாணவர்களின் மன அமைதிக்காகவும் சுற்றுச்சூழலுக்காகவும் மரங்கள் வளர்க்கப்படுகின்றன. தேச பக்தியையும், பொது அறிவையும் வளர்த்துக்கொள்ளும் விதமாகத் தலைவர்கள், அறிஞர்கள் படங்கள், அவர்கள் கூறிய கருத்துகள் சுவர் முழுவதும் எழுதப்பட்டுள்ளன.

தற்போது பலரும் தனியார் பள்ளிகளை நோக்கிச் செல்கின்றனர். அவர்களின் கவனத்தை அரசுப் பள்ளியின் பக்கம் திரும்ப வேண்டும் என, பள்ளியின் முன்னாள் மாணவர் வை.கோவிந்தராசு 25 ஆயிரம் ரூபாய் நிதியுதவி அளித்தார். நானும் எனது பங்குக்கு 10 ஆயிரம் ரூபாய் வழங்கியுள்ளேன். மாணவர்களின் சேர்க்கையை அதிகரிக்க வேண்டும் என்ற நோக்கில், பள்ளியில் புதிதாகச் சேரும் அனைத்து மாணவர்களுக்கும் அவர்களின் பெயரில் தலா 1,000 ரூபாய் வீதம் அஞ்சலகத்தில் வைப்பு வைக்கப்படும்.

மேலும், கற்றலுக்குத் தேவையான உபகரணங்கள் வழங்கப்படுகின்றன. அத்துடன் புதிதாகச் சேர்ந்த மாணவர்களின் பெற்றோர்களைக் குலுக்கல் முறையில் தேர்வு செய்து முதலிடம் பெறும் நபருக்கு ரூ.10 ஆயிரம், இரண்டாம் இடம் பெறும் நபருக்கு ரூ.5 ஆயிரம், மூன்றாமிடம் பெறும் நபருக்கு ரூ.2,500 ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்பட உள்ளது.

தொலைதூரத்தில் இருந்து வரும் மாணவர்களுக்கு வாகன வசதி, 10-ம் வகுப்புப் பொதுத் தேர்வில் முதல் 3 இடங்களைப் பிடிக்கும் மாணவர்களுக்கு சிறப்புப் பரிசு, 450-க்கு மேல் மதிப்பெண் பெறும் அனைத்து மாணவர்களுக்கும் 11-ம் வகுப்பில் சேர்வதற்கான கல்விச் செலவு ஆகியவையும் வழங்கப்பட உள்ளன'' என்று தலைமையாசிரியர் சரவணன் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x