Published : 25 Jun 2021 04:21 PM
Last Updated : 25 Jun 2021 04:21 PM

‘இந்து தமிழ்’ செய்தி எதிரொலி: தந்தை இறந்ததால் காய்கறி வியாபாரத்தில் ஈடுபட்ட மாணவருக்கு உதவிய அதிமுக மாவட்டச் செயலாளர்

வேலூரில் காய்கறி வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த மாணவர் யஸ்வந்துக்கு ரூ.10 ஆயிரம் தொகையை வழங்கிய அதிமுக மாநகர மாவட்டச் செயலாளர் எஸ்.ஆர்.கே.அப்பு, மாநகரப் பொருளாளர் மூர்த்தி.

வேலூர்

வேலூரில் தந்தை இறந்ததால் காய்கறி வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த 8ஆம் வகுப்பு மாணவர் குறித்த செய்தி ‘இந்து தமிழ் திசை’ இணையதளத்தில் வெளியானதை அடுத்து, அதிமுக மாநகர் மாவட்டச் செயலாளர் எஸ்.ஆர்.கே.அப்பு ரூ.10 ஆயிரம் உதவித்தொகையை மாணவருக்கு வழங்கினார்.

வேலூர் மாவட்டம் பலவன்சாத்து குப்பம், ஒத்தவாடை தெருவைச் சேர்ந்தவர் மாற்றுத்திறனாளி ஜெயசீலன் (57). இவரது மனைவி இந்திரா (50). இவர்களுக்கு ஜனனி (15) என்ற மகளும், யஸ்வந்த் (13) என்ற மகனும் உள்ளனர். வேலூர் டோல்கேட் பகுதியில் உள்ள உழவர் சந்தை முன்பாக ஜெகதீசன் காய்கறி வியாபாரம் செய்துவந்தார்.

இதில் கிடைத்த சொற்ப வருமானத்தில் குடும்பத்தை நடத்தி வந்தார். ஜெகதீசனுக்கு திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டதால் கரோனா அறிகுறிகளுடன் வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கடந்த மே மாதம் 11ஆம் தேதி அனுமதிக்கப்பட்டர். அங்கு சிகிச்சைப் பலனின்றி ஜெகதீசன் இறந்தார். அவருக்குக் கரோனா நெகட்டிவ் என்று சான்றிதழ் அளிக்கப்பட்ட நிலையில், அடக்கம் செய்யப் பண வசதி இல்லாததால் தன்னார்வலர்கள் உதவியுடன் உடல் அடக்கம் செய்யப்பட்டது.

இதற்கிடையில், குடும்பத்தைக் காப்பாற்றத் தாயாருடன் இணைந்து 8ஆம் வகுப்பு மாணவர் யஸ்வந்த், காய்கறி வியாபாரத்தில் கடந்த சில நாட்களாக ஈடுபட்டு வந்தார். இதுகுறித்த செய்தி ‘இந்து தமிழ் திசை’ இணையதளத்தில் கடந்த புதன்கிழமை அன்று வெளியானது.

இந்நிலையில் செய்தியை அறிந்த வேலூர் மாநகர் மாவட்ட அதிமுக செயலாளர் எஸ்.ஆர்.கே.அப்பு, மாணவர் யஸ்வந்துக்கு ரூ.10 ஆயிரம் உதவித் தொகையை இன்று (ஜூன் 25) காலை நேரில் சென்று வழங்கினார். அப்போது, மாநகர் மாவட்டப் பொருளாளர் மூர்த்தி மற்றும் அதிமுக நிர்வாகிகள் உடனிருந்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x