Published : 24 Jun 2021 09:57 PM
Last Updated : 24 Jun 2021 09:57 PM

உச்ச நீதிமன்ற எச்சரிக்கை எதிரொலி: ஆந்திராவில் 10, 12ம் வகுப்பு பொதுத் தேர்வு ரத்து

தேர்வை நடத்தி அதனால் ஒரு மரணம் ஏற்பட்டால்கூட அதற்கு இழப்பீடாக ரூ.1 கோடி வழங்க உத்தரவிடுவோம் என ஆந்திர அரசுக்கு உச்ச நீதிமன்றம் எச்சரித்த நிலையில் 10, 12ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக ஆந்திர மாநில அரசு அறிவித்துள்ளது.

கரோனா பெருந்தொற்று பாதிப்பு காரணமாக, இந்த ஆண்டு சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசு அறிவித்தது.

அதையடுத்து தற்போது வரை தமிழகம் உள்பட 21 மாநிலங்கள் பிளஸ் 2 பொதுத் தேர்வை ரத்து செய்துள்ளன. 6 மாநிலங்கள் தேர்வை நடத்தி முடித்துள்ளன.

இந்நிலையில் பொதுத் தேர்வுகளை ரத்து செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் இன்று நீதிபதிகள் ஏ.எம்.கன்வில்கர் மற்றும் தினேஷ் மகேஸ்வரி அமர்வில் விசாரணைக்கு வந்தன.

அதில் நீதிபதிகள் கூறும்போது, ''சிபிஎஸ்இ, ஐசிஎஸ்சி வாரியங்கள் இரண்டு வார இடைவெளியில் மதிப்பெண் கணக்கீட்டு முறையைச் சமர்ப்பித்ததுபோல, பிற மாநிலக் கல்வி வாரியங்களும் மதிப்பீட்டு முறையை விரைவில் இறுதி செய்யவேண்டும். இன்றில் இருந்து 10 நாட்களுக்கு உள்ளாக உச்ச நீதிமன்றத்திடம் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும். அதேபோல அக மதிப்பீட்டு முறையை இறுதி செய்து, ஜூலை 31-ம் தேதிக்குள் 12-ம் வகுப்புத் தேர்வு முடிவுகளை அறிவிக்க வேண்டும்.

பிற மாநிலங்கள் பிளஸ் 2 தேர்வை ரத்துசெய்த நிலையில், ஆந்திரப் பிரதேச அரசு தேர்வை நடத்தியே ஆக வேண்டும் என்று கேட்பது ஏன்? பெருந்தொற்றுச் சூழல் அனைத்தும் முறையாக ஆய்வு செய்யப்பட்டதா என்பது குறித்த அறிக்கையை ஆந்திர அரசு தாக்கல் செய்ய வேண்டும். தேர்வை நடத்தி அதனால் ஒரு மரணம் ஏற்பட்டால்கூட அதற்கு இழப்பீடாக ரூ.1 கோடி வழங்க உத்தரவிடுவோம்'' என்று நீதிபதிகள் எச்சரித்தனர்.
மேலும் இது தொடர்பாக நாளை (ஜூன் 25) மதியம் 2 மணிக்கு மீண்டும் விசாரிக்கப்படும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

இந்நிலையில், 10, 12ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக ஆந்திர மாநில அரசு அறிவித்துள்ளது.

இது குறித்து ஆந்திரப் பிரதேச கல்வி அமைச்சர் ஏ.சுரேஷ் கூறும்போது, "உச்ச நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது போல் ஜூலை 31ம் தேதிக்குள் தேர்வுகளை நடத்தி முடிவுகளையும் அறிவிக்க சாத்தியமில்லை. அதனால் மாநிலத்தில் 10, 12ம் வகுப்பு தேர்வுகள் ரத்து செய்யப்படுகிறது" எனக் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x