Published : 23 Jun 2021 03:11 AM
Last Updated : 23 Jun 2021 03:11 AM

‘ஸ்மார்ட் போன்’ இல்லாததால் ஆன்லைன் வகுப்பில் பங்கேற்க இயலாத மாணவர்களின் விவரங்களை சமர்ப்பிக்க வேண்டும்: முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு பள்ளிக்கல்வித் துறை உத்தரவு

‘ஸ்மார்ட் போன்’ இல்லாததால், இணையதள வகுப்பில் பங்கேற்க இயலாத மாணவர்களின் விவரங்களை சேகரித்து அனுப்புமாறு முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கு பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

இணையவழியில் கற்பித்தல்

தமிழகத்தில் கரோனா வைரஸ் பரவலால், நடப்பு கல்வியாண்டில் பள்ளிகளைத் திறப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து வீட்டுப்பள்ளித் திட்டத்தின்கீழ் கல்வி தொலைக்காட்சி மற்றும் இணையதளம் வழியாக மாணவர்களுக்கு கற்பித்தல் பணிகளை முன்னெடுக்க பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

அதன்படி தனியார் பள்ளிகள் இணையதளம் வழியாக மாணவர்களுக்கு வகுப்புகளை எடுத்து வருகின்றன. மறுபுறம் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு கல்வி தொலைக்காட்சி மூலம் பாடங்கள் நடத்தப்படுகின்றன. மேலும், பாடம் சார்ந்த பயிற்சி வழிமுறைகளைஆசிரியர்கள் வாட்ஸ்அப் உள்ளிட்ட செயலிகள் மூலம் மாணவர்களுக்கு அனுப்பி, கற்பித்தல் பணிகளை மேற்கொள்ளவும் பள்ளிக்கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது.

‘ஸ்மார்ட் போன்’ வசதி

அதேநேரம் அரசுப் பள்ளிகளில் பயிலும் கணிசமான மாணவர்கள், ஸ்மார்ட் போன் வசதியில்லாததால் இணைய வழியிலான பயிற்சி வகுப்புகளில் பங்கேற்க முடியாத நிலை நிலவுகிறது. இதற்கான மாற்று ஏற்பாடுகளை மத்திய, மாநில அரசுகள் பரிசீலித்து வருகின்றன. இந்நிலையில் இணையதள வகுப்பில் பங்கேற்க இயலாத மாணவர்களின் விவரங்களை சேகரிக்கும் பணிகளில் கல்வித்துறை ஈடுபட்டுள்ளது.

இதுகுறித்து ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வியின் மாநில திட்டஇயக்குநர் சுதன், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கும் அனுப்பிய சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:

கல்வி தடைபடக் கூடாது

புதிய கல்வியாண்டு தொடங்கியநிலையில், இணையதள வகுப்புகளில் அனைத்து மாணவர்களையும் பங்கேற்கவைக்க வேண்டும்என்று மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. இதையடுத்து ஸ்மார்ட்போன் இல்லாததால், இணைய வகுப்பில் பங்கேற்க இயலாத மாணவர்களின் பட்டியலை மாவட்ட வாரியாக சேகரித்து அனுப்ப வேண்டும். ஏழை மாணவர்களின் கல்வி தடைபடாமல் இருக்க ஏதுவாக அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள் விரைந்து பணிகளை முடிக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள் ளது.

இந்த பட்டியல் கிடைத்ததும் மத்திய, மாநில அரசுகளின் நிதியுதவி கொண்டு மாணவர்களுக்கு தேவையான வசதிகள் செய்து தரப்படும் என்று துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x