Published : 22 Jun 2021 03:12 AM
Last Updated : 22 Jun 2021 03:12 AM

சென்னை மாநகராட்சி பள்ளிகளில் ஒரே வாரத்தில் 7 ஆயிரம் மாணவர்கள் சேர்க்கை

சென்னை

சென்னை மாநகராட்சியில் தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் என மொத்தம் 281 பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. அவற்றில் சுமார் 90 ஆயிரம் மாணவர்கள் பயின்று வருகின்றனர். சுமார் 3 ஆயிரம் ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.

மாநகராட்சிப் பள்ளிகளில் அனைத்து வகுப்புகளுக்கும் கடந்த 14-ம் தேதி முதல் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. ஒரே வாரத்தில் சுமார் 7 ஆயிரம் மாணவர்கள் சேர்ந்துள்ளனர்.

இதுகுறித்து தமிழ்நாடு ஆசிரியர் சங்க மாநிலத் தலைவர் பி.கே.இளமாறன் கூறும்போது, "மாநகராட்சிப் பள்ளிகளில் ஒவ்வோர் ஆண்டும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் புதிதாக சேருவார்கள். விஜயதசமி வரை மாணவர் சேர்க்கை நடைபெறும். ஆனால் தற்போது குறைந்த நாட்களில் 7 ஆயிரம் மாணவர்கள் பள்ளியில் சேர்ந்துள்ளனர்.

கரோனா ஊரடங்கால் வாழ்வாதாரத்தை இழந்த மக்கள், தனியார் பள்ளிகள் கல்விக் கட்டணத்தை கட்ட முடியாமல், மாநகராட்சிப் பள்ளிகளில் சேருவது அதிகரித்துள்ளது. மாற்றுச் சான்று இல்லாவிட்டாலும் மாணவர் சேர்க்கையை மேற்கொள்ளுமாறு அரசு அறிவுறுத்தியதும், மக்கள் விரும்பும் ஆங்கிலக் கல்வியை மாநகராட்சிப் பள்ளிகளில் வழங்குவதும் இதற்குக் காரணமாகும்.

மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி, மாநகராட்சிப் பள்ளிகளில் தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டு, பள்ளிகளில் உட்கட்டமைப்புகளை மேம்படுத்துமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தி வருகிறார். மேலும், பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகளை துணை ஆணையர் (கல்வி) டி.சினேகா மேற்கொண்டு வருகிறார்" என்றார்.

மாநகராட்சி துணை ஆணையர் (கல்வி) டி.சினேகா கூறும்போது, "பள்ளிகளுக்கு அருகில் உள்ள வீடுகளைச் சேர்ந்த குழந்தைகளை பள்ளியில் சேர்க்க ஆசிரியர்கள் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். மாநகராட்சிப் பள்ளிகளில் சேருவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்த விழிப்புணர்வுக் கையேடுகள் பெற்றோரிடம் வழங்கப்பட்டு வருகின்றன. மாநகராட்சிப் பள்ளிகளில் சேர்ந்தால், நல்ல கல்வி கிடைக்கும் என்று மக்கள் மத்தியில் நம்பிக்கை ஏற்படுத்தப்பட்டு வருகிறது" என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x