Published : 21 Jun 2021 08:52 PM
Last Updated : 21 Jun 2021 08:52 PM

ஆக.15 முதல் பிளஸ் 2 விருப்பத் தேர்வுகள்: சிபிஎஸ்இ அறிவிப்பு

ஆகஸ்ட்15-ம் தேதி முதல் செப்டம்பர் 15-ம் தேதி வரை பிளஸ் 2 விருப்பத் தேர்வுகள் நடத்தப்படும் என்று சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது.

கரோனா பெருந்தொற்று பாதிப்பு காரணமாக, இந்த ஆண்டு சிபிஎஸ்இ 12-ம் வகுப்புப் பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசு அறிவித்தது. 12-ம் வகுப்பில் நடந்த தேர்வுகளில் இருந்து 40% மதிப்பெண்கள், 10 மற்றும் 11-ம் வகுப்பில் நடந்த தேர்வுகளில் இருந்து தலா 30% மதிப்பெண்களை எடுத்து மொத்த மதிப்பெண்கள் கணக்கிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. இந்த மதிப்பீட்டு முறைக்குக் கடந்த 17-ம் தேதி உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியது.

இந்நிலையில், ஆகஸ்ட்15-ம் தேதி முதல் செப்டம்பர் 15-ம் தேதி வரை பிளஸ் 2 விருப்பத் தேர்வுகள் நடத்தப்படும் என்று சிபிஎஸ்இ உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக சிபிஎஸ்இ இன்று தாக்கல் செய்த புதிய பிரமாணப் பத்திரத்தில், புதிய மதிப்பெண் கணக்கீட்டு முறையில் தங்களுக்கு வழங்கப்பட்ட மதிப்பெண்கள் போதுமானதாக இல்லை என்று கருதும் மாணவர்கள் மீண்டும் ஆகஸ்ட்15 முதல் செப்டம்பர் 15 வரை பொதுத்தேர்வு எழுத வாய்ப்பு அளிக்கப்படும் என்று சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது.

ஜூலை 31-ம் தேதி 12-ம் வகுப்புத் தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்ட பிறகு, விருப்பத் தேர்வுகளுக்கு விண்ணப்பிக்கும் விவரங்களை சிபிஎஸ்இ வெளியிடும்.

எனினும் கரோனா சூழல் சீரடைந்த பிறகு, ஆப்லைன் தேர்வை நடத்த வாய்ப்பிருந்தால் மட்டுமே ஆகஸ்ட்15 முதல் செப்டம்பர் 15 வரை விருப்பத் தேர்வுகள் நடக்கும் என்று உச்ச நீதிமன்றத்தில் சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x