Published : 21 Jun 2021 03:26 PM
Last Updated : 21 Jun 2021 03:26 PM

சிபிஎஸ்இ தனித் தேர்வர்கள், கம்பார்ட்மெண்ட் பிரிவுக்கும் பொதுத்தேர்வுகளை ரத்து செய்க: உச்ச நீதிமன்றத்தில் மாணவர்கள் மனு

சிபிஎஸ்இ தனித் தேர்வர்கள், கம்பார்ட்மெண்ட் பிரிவுக்கும் பொதுத்தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் மாணவர்கள் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.

கரோனா பெருந்தொற்று பாதிப்பு காரணமாக, இந்த ஆண்டு சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசு அறிவித்தது. அதையடுத்து சிபிஎஸ்இ 12-ம் வகுப்புத் தேர்வு முடிவை எந்த முறையில் நிர்ணயிக்கலாம் என்பது குறித்து ஆய்வுசெய்ய 12 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது.

அதன்படி, 12-ம் வகுப்பில் நடந்த தேர்வுகளில் இருந்து 40% மதிப்பெண்கள், 10 மற்றும் 11-ம் வகுப்பில் நடந்த தேர்வுகளில் இருந்து தலா 30% மதிப்பெண்களை எடுத்து மொத்த மதிப்பெண்கள் கணக்கிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. அதேபோல தனித் தேர்வர்களுக்கும் தங்களுக்கு வழங்கப்பட்ட மதிப்பெண்கள் போதுமானதாக இல்லை என்று கருதும் மாணவர்களுக்கும் மீண்டும் பொதுத்தேர்வு எழுத வாய்ப்பு அளிக்கப்படும். கரோனா சூழல் சீரடைந்த பிறகு அந்தத் தேர்வுகள் நடக்கும் என்று சிபிஎஸ்இ தெரிவித்தது. இந்த முறைக்குக் கடந்த 17-ம் தேதி உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியது.

இந்நிலையில், சிபிஎஸ்இ தனித் தேர்வர்களுக்கும், கம்பார்ட்மெண்ட் பிரிவு மாணவர்களுக்கும் பொதுத் தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும் என்று ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் உச்ச நீதிமன்றத்தில் இன்று மனுத்தாக்கல் செய்துள்ளனர்.

அந்த மனுவில், வழக்கமான 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களைப் போல எங்களையும் சமமாக நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், 12-ம் வகுப்புத் தனித் தேர்வர்கள் மற்றும் கம்பார்ட்மெண்ட் மாணவர்களை மதிப்பீடு செய்து, சிபிஎஸ்இ குறிப்பிட்ட கால இடைவெளிக்குள் தேர்வு முடிவுகளை வெளியிட உச்ச நீதிமன்றம் அறிவுறுத்த வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல ஏற்கெனவே சிபிஎஸ்இ மதிப்பெண் கணக்கீட்டு முறையில் திருப்தி அடையாத 10, 12-ம் வகுப்புத் தனித் தேர்வர்கள் மற்றும் கம்பார்ட்மெண்ட் மாணவர்கள், குறிப்பிட்ட கால இடைவெளிக்குள் தங்களின் கோரிக்கைகளைப் பதிவு செய்ய சிபிஎஸ்இ அனுமதிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்றும் வழக்கமான மாணவர்களைப் போலவே தாங்களும், தங்களின் கோரிக்கைகளும் சமத்துவத்துடன் நடத்தப்பட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x