Published : 18 Jun 2021 01:45 PM
Last Updated : 18 Jun 2021 01:45 PM

10ஆம் வகுப்பு மாணவர்களின் சான்றிதழ்களில் மதிப்பெண்கள் இடம்பெற வழிவகை செய்க: ஓபிஎஸ்

10ஆம் வகுப்பு மாணவர்களின் சான்றிதழ்களில் மதிப்பெண்கள் இடம்பெற வழிவகை செய்ய வேண்டும் என, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக, ஓபிஎஸ் இன்று (ஜூன் 18) வெளியிட்ட அறிக்கை:

"11ஆம் வகுப்பு சேர்க்கைக்கு நுழைவுத் தேர்வு, நீட் தேர்வுக்கு ஆன்லைனில் பயிற்சி என்ற வரிசையில், தற்போது 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வழங்கப்படும் சான்றிதழில் மதிப்பெண்கள் குறிப்பிடப்பட மாட்டாது என்றும், தேர்ச்சி என்று மட்டுமே குறிப்பிடப்படும் என்றும், அண்மையில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அறிவித்திருப்பது மாணவர்கள், பெற்றோர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

அதிமுக ஆட்சியில், கரோனா தாக்கம் காரணமாக 10ஆம் வகுப்புத் தேர்வுகள் நடத்தப்படாத சூழ்நிலையில், காலாண்டு மற்றும் அரையாண்டுத் தேர்வுகளில் அந்தந்த மாணவர்கள் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் 80 விழுக்காடு மதிப்பெண்களும், வருகைப் பதிவின் அடிப்படையில் 20 விழுக்காடு மதிப்பெண்களும் வழங்க உத்தரவிடப்பட்டு, அதன்படி மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

நடப்பாண்டில், பிளஸ் 2 வகுப்புக்கான சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்ட சூழ்நிலையில், அந்த மாணவர்களுக்கான மதிப்பெண்கள் வழங்குவதற்காக உயர்மட்டக் குழு ஒன்றை மத்திய அரசு அமைத்திருக்கிறது. இந்தக் குழு 10ஆம் வகுப்பு இறுதித் தேர்வில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் 30 விழுக்காடு மதிப்பெண்களும், பிளஸ் 1 வகுப்பு இறுதித் தேர்வில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் 30 விழுக்காடு மதிப்பெண்களும், பிளஸ் 2 வகுப்பில் பொதுத்தேர்வுக்கு முன் நடைபெற்ற தேர்வில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் 40 விழுக்காடு மதிப்பெண்களும் அளித்து, 12-ம் வகுப்பு மதிப்பெண்களை நிர்ணயிக்கப் போவதாகச் செய்திகள் வெளிவருகின்றன.

இதேபோல், சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு மாணவர்களைப் பொறுத்தவரையில், உள் மதிப்பீட்டுக்கு 20 விழுக்காடு மதிப்பும், பொதுத் தேர்வுக்கு முன் நடைபெற்ற தேர்வுகளில் பெற்ற மதிப்பெண்களுக்கு 80 விழுக்காடு மதிப்பும் அளித்து, அதன் அடிப்படையில் 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண்கள் வழங்க மத்திய அரசு முடிவெடுத்துள்ளது.

நடப்பாண்டில், தமிழ்நாட்டில் பிளஸ் 2 வகுப்புக்கான பொதுத் தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ள சூழ்நிலையில், பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலாளர் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டு, அந்தக் குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் மதிப்பெண்கள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இப்படிப்பட்ட நடைமுறை பின்பற்றப்பட்டு வரும் சூழ்நிலையில், 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண்கள் வழங்கப்படாது என்றும், தேர்ச்சி என்று மட்டுமே சான்றிதழில் குறிப்பிடப்படும் என்றும் அறிவித்திருப்பது மிகுந்த அதிர்ச்சியை அளிப்பதாக மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் தெரிவிக்கின்றனர்.

எந்த மதிப்பெண் அடிப்படையில் 11ஆம் வகுப்பு மாணவர் சேர்க்கை நடைபெறுகிறதோ அல்லது எந்த மதிப்பெண் அடிப்படையில் பாலிடெக்னிக் வகுப்புகளில் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறதோ அந்த அடிப்படையிலாவது 10ஆம் வகுப்புக்கான மதிப்பெண்கள் மாணவர்களுக்கு அளிக்கப்பட்டு, அதற்கான சான்றிதழ்கள் வழங்கப்பட வேண்டும் என்பது அனைவரின் எதிர்பார்ப்பு.

ஏனென்றால், முக்கியத்துவம் வாய்ந்த 10ஆம் வகுப்புச் சான்றிதழில் மதிப்பெண்கள் இல்லாமல் இருப்பது, எதிர்காலத்தில் வேலைவாய்ப்புகளைப் பெறுவதில் சிக்கல் ஏற்படுமோ என்ற ஐயப்பாடு மாணவர்களின் மனங்களில் நிலவுவதுதான்.

எனவே, தமிழக முதல்வர் இதில் உடனடியாகத் தலையிட்டு, 10ஆம் வகுப்புப் பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், தொடர்புடைய அனைவரையும் கலந்தாலோசித்து ஏதாவது ஒரு வழிமுறையைப் பின்பற்றி 10ஆம் வகுப்பு மாணவர்களின் சான்றிதழ்களில் மதிப்பெண்கள் இடம்பெற வழிவகை செய்ய வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்".

இவ்வாறு ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x