Published : 17 Jun 2021 07:55 PM
Last Updated : 17 Jun 2021 07:55 PM

ஐசிஎஸ்இ பிளஸ் 2 தேர்வு முடிவுகள் கணக்கீடு எப்படி?- சிஐஎஸ்இசி வாரியம் விளக்கம்

ஐசிஎஸ்இ பிளஸ் 2 தேர்வு முடிவுகள் கணக்கிடப்படும் முறை குறித்து சிஐஎஸ்இசி வாரியம் தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் கரோனா பெருந்தொற்று பாதிப்பு காரணமாக, இந்த ஆண்டு சிபிஎஸ்இ 12-ம் வகுப்புப் பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசு அறிவித்ததை அடுத்து, சிஐஎஸ்இசி வாரியமும் பொதுத்தேர்வை ரத்து செய்தது.

சிபிஎஸ்இ மதிப்பெண் கணக்கீட்டுக் குழு இன்று உச்ச நீதிமன்றத்தில் சமர்ப்பித்த அறிக்கையில், மாணவர்களின் 12-ம் வகுப்பில் நடந்த தேர்வுகளில் இருந்து 40% மதிப்பெண்கள், 10 மற்றும் 11-ம் வகுப்பில் நடந்த தேர்வுகளில் இருந்து தலா 30% மதிப்பெண்களை எடுத்து மொத்த மதிப்பெண்கள் கணக்கிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல ஐசிஎஸ்இ பிளஸ் 2 தேர்வு முடிவுகள் கணக்கிடப்படும் முறை குறித்து சிஐஎஸ்இசி வாரியம் தெரிவித்துள்ளது. அதன்படி, ''மாணவர்களின் 11, 12-ம் வகுப்புகளின் செயல் திட்டம் மற்றும் செய்முறைத் தேர்வுகளின் மதிப்பெண்கள், 9 மற்றும் 10-ம் வகுப்புத் தேர்வுகளில் மாணவர்கள் பெற்ற மதிப்பெண்களில் சிறந்த மதிப்பெண்கள், கடந்த 6 ஆண்டுகளில் (2015 - 2020) மாணவரின் செயல்பாடுகள் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு மதிப்பெண்கள் மதிப்பீடு செய்யப்படும்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி கணக்கிடப்பட்ட தேர்வு முடிவுகள் ஜூலை 20-ம் தேதி வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மதிப்பெண் பட்டியல் வெளியான பிறகு சில மாணவர்கள், தங்களுக்கு வழங்கப்பட்ட மதிப்பெண்கள் போதுமானதாக இல்லை என்று கருதினால், அவர்களுக்குத் தேர்வு எழுத வாய்ப்பு அளிக்கப்படும். கரோனா சூழல் சீரடைந்த பிறகு அந்தத் தேர்வுகள் நடக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது.

இந்த மதிப்பெண் கணக்கீட்டு முறைக்கு அனுமதி அளித்துள்ள உச்ச நீதிமன்றம், மதிப்பெண் கணக்கீடு செய்யப்படும் முறையை சிஐஎஸ்இசி தனது இணையதளத்தில் பதிவுசெய்ய வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x