Published : 17 Jun 2021 12:26 PM
Last Updated : 17 Jun 2021 12:26 PM

சிபிஎஸ்இ பிளஸ் 2 மதிப்பெண் கணக்கீடு எப்படி?- முழு விவரம்

சிபிஎஸ்இ பிளஸ்2 பொதுத்தேர்வு மதிப்பெண்கள் எப்படிக் கணக்கீடு செய்யப்படும் என்று சிபிஎஸ்இ வாரியம், உச்ச நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ளது.

நாடு முழுவதும் கரோனா பரவல் காரணமாக சிபிஎஸ்இ பிளஸ் 2 பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டு, மாணவர்கள் அனைவருக்கும் தேர்ச்சி வழங்கப்பட்டது. இதையடுத்து மாணவர்களுக்கு மதிப்பெண் அளிப்பது குறித்து முடிவு செய்யக் குழு அமைக்கப்பட்டது. அந்தக் குழு வழங்கும் பரிந்துரைகள் அடிப்படையில் இறுதி மதிப்பெண் வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்தது.

இந்நிலையில் மாணவர்களுக்குத் தேர்ச்சி மதிப்பீட்டை நிர்ணயம் செய்வதற்காக சிபிஎஸ்இ வாரியம் சார்பில் அமைக்கப்பட்ட நிபுணர் குழு இன்று உச்ச நீதிமன்றத்தில் தனது அறிக்கையைச் சமர்ப்பித்தது.

அந்த அறிக்கையில், 12-ம் வகுப்பில் நடந்த தேர்வுகளில் இருந்து 40% மதிப்பெண்கள், 10 மற்றும் 11-ம் வகுப்பில் நடந்த தேர்வுகளில் இருந்து 30% மதிப்பெண்களை எடுத்து மொத்த மதிப்பெண்கள் கணக்கிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

* 12-ம் வகுப்புப் பருவத் தேர்வுகள், காலாண்டு, அரையாண்டுத் தேர்வுகள் அல்லது பொதுத்தேர்வுக்கு முந்தைய தேர்வுகளில் பெற்ற மதிப்பெண்களில் இருந்து 40% மதிப்பெண்கள் வழங்கப்படும்.

* 11-ம் வகுப்புப் பொதுத்தேர்வு மதிப்பெண்களில் இருந்து 30% மதிப்பெண்கள் வழங்கப்படும்.

* 10-ம் வகுப்புப் பொதுத் தேர்வுகளில் 5 பாடங்களில் அதிகபட்ச மதிப்பெண்கள் பெற்ற 3 பாடங்களின் மதிப்பெண்களில் இருந்து 30% மதிப்பெண்கள் வழங்கப்படும்.

* 12-ம் வகுப்பு அக மதிப்பீடு அல்லது செய்முறைத் தேர்வுகளின் மதிப்பெண்கள் ஏற்கெனவே சிபிஎஸ்இ போர்ட்டலில் சம்பந்தப்பட்ட பள்ளி பதிவேற்றம் செய்த மதிப்பெண்களாக இருக்க வேண்டும்.

* இவ்வாறு கணக்கிடப்பட்ட ஒட்டுமொத்த 12-ம் வகுப்பு இறுதி மதிப்பெண்கள், சம்பந்தப்பட்ட பள்ளியின் கடந்தகால 12-ம் வகுப்புப் பொதுத்தேர்வு முடிவுகளை ஒட்டி அமைந்திருக்க வேண்டும்.

மதிப்பெண் நடுநிலைக் குழு

கணக்கிடப்படும் மதிப்பெண்களைப் பார்வையிட ஒவ்வொரு பள்ளியிலும் இரண்டு மூத்த ஆசிரியர்களைக் கொண்டு நடுநிலைக் குழு அமைக்கப்பட வேண்டும். தேவைப்பட்டால் 3-வது நபரை அமைத்துக் கொள்ளலாம்.

தேர்வு முடிவுகள்

12-ம் வகுப்புத் தேர்வு முடிவுகள் ஜூலை 31-ம் தேதி வெளியாகும். மதிப்பெண் பட்டியல் வெளியான பிறகு சில மாணவர்கள், தங்களுக்கு வழங்கப்பட்ட மதிப்பெண்கள் போதுமானதாக இல்லை என்று கருதினால், அவர்களுக்குத் தேர்வு எழுத வாய்ப்பு அளிக்கப்படும். கரோனா சூழல் சீரடைந்தபிறகு அந்தத் தேர்வுகள் நடக்கும்.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x